Thursday, October 18, 2007

04-மனக் கருவூலத்திலிருந்து

வீடு பெறுதல்
-----------------
வெட்ட வெளியில் வெறும் தரையில் மனிதன் வாழமுடியாது. வெயில், மழை, குளிர் போன்றவை களிலிருந்து தப்ப வீடு அவசியம். அந்த வீட்டை வெட்டவெளியில் தரையின் மீதுதான் கட்டியாக வேண்டும். சுவர் எழுப்பிக் கூரை வேய்ந்தாலும் அவைகளின்மீது வாழமுடியாது. அவற்றின் உள்ளே உள்ள தரைதான் உபயோகமாக அமையும். பின்னப்படாத இடம் மைதானம்; பின்னப் பட்ட இடம் வீடு. ஆக, பயன்படுதல் என்பது தரைதான்.
வெற்று வெளி போன்றது பரமாத்மா. ஏகமானது. ஐம்பூதத்தாலான உடலுக்குள் பின்னப் பட்டிருப்பது ஜீவாத்மா. ஜீவனற்ற உடல் செயலற்ற பிணம். மண்ணாலான பூமி ஒன்றேயானாலும் அதன் மண் துகள்களை அள்ளலாம், மறுபடி தரையில் போடலாம். சத்தியமான "நான்ஔ என்னும் ஒன்றுதான் பரமாத்மா. அது உடலால் பின்னப்படும்போது "ஜீவன்ஔ என்னும் பெயர் பெறுகிறது. உடல் வீழும்போது பரமனில் கலக்கிறது. மனதில் பதிந்துள்ள எண்ணப் பதிவுகள் மறு உடலில் புகுகிறது. செயலும் விளைவும் தொடர் கின்றன. ஜனன மரணம் அமைகிறது.
இளநீராக இருக்கும்போது ஓட்டோடு கலந்து ஒட்டியிருந்த தேங்காய் முற்றிக் கொப்பரையாக மாறிவிட்ட பிறகு ஓட்டிலிருந்து பிரிபட்டு விடுகிறது. ஓடு உடைபட்ட கொப்பரையை முளைக்க வைக்க முடியாது. அதுபோலப் பிறவி கள் மூலம் முற்றிப் பக்குவப்பட்ட ஜீவன் மரணத்துக்குப் பின் மறு பிறப்பு எய்துவதில்லை. இளநி கொப்பரையாவதும், ஜீவன் பரமன் ஆவதும் இயற்கை செய்விக்கும் கூத்து. அதற்கென்று ஒரு கால அளவு இருக்கிறது. இதை மாற்ற ஈசனாலும் முடியாது. பக்தனாகவே இருந்து கடவுளிடம் மோக்ஷம் தா என்று யாசித்தாலும் உரிய காலம் வரும்வரை ஒன்றும் நடக்காது.
ஒரு சிஸுவுக்கு வயது ஏற ஏற உடல் மாற்றம் வாலிபம், வயோதிகம் என்று எல்லாம் இயற்கையாக நிகழ்கிறது. உடல் வளர்ச்சிபெற பசி என்ற ஒன்று தோன்றி சாப்பிடச் செய்கிறது. பசித்த குழந்தைக்குப் பெற்றோர் அன்னம் இடுவ தோடு அவர்கள் கடமை தீர்ந்து விடுகிறது. உடலை இயற்கை வளர்க் கிறது. அதுபோல ஜீவ வளர்ச்சியிலும் பக்தி, அறிவு, ஆராய்ச்சி என்பன போன்ற பசி ஏற்படுகிறது. அப்போது நமக்குள் நாம் அறியாத ஒன்று இருந்து நமக்குப் பெற்றோர் போல வழிகாட்டுகிறது. இதிலும் இயற்கைதான் நம்மைப் பக்குவப் படுத்துகிறது.
ஒரு தானியத்தை வறுத்துப் பொடித்து உணவாக மாற்றுவதென்றால், முதலில் அடுப்பை எரியவிட்டு, வாணலியை அதன்மேல் ஏற்றி, தானியத்தை வாணலியில் இட்டு, ஓயாமல் அதைச் சட்டுவத்தால் கிளறிவிடல் தேவைப் படுகிறது. அப்படிச் செய்யாவிட்டால் அடிப் பகுதி கருகியும், மேல்பகுதி வறு படாமலும் வீணாகிவிடும். இதேபோல்தான் இயற்கை நம்மை இன்ப துன்பங் களில் புறட்டிப் பக்குவப் படுத்துகிறது. இயற்கையானது பகல்-இரவு, சுகம்-துக்கம் போன்று எல்லாவற்றிலும் இருமையை வைத்து எதிர்விளைவுகளை உண்டாக்கி பக்குவப்படுத்துகிறது. நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லையே ஒழிய வாழ்க்கையின் விளைவுகள் எல்லாமே ஏதோ ஒரு காரண காரியத் தொடர்ச்சியாகத்தான் நடந்துவருகிறது
.

உடை

உணவு இல்லாமல் இரண்டொரு நாள் வாழ்ந்துவிட முடியும்; ஆனால் உடை அணியாமல் இருக்க முடியாது. வயதுக்கு ஏற்பவும், கால நிலைகளுக்கு ஏற்பவும் உடை தயார்செய்து அணிகிறோம். குழந்தைகளுக்கும் அணிவிக் கிறோம். உடல் வளர்ச்சி அடையும்போது உடை கிழியாதபோதும் அதை ஒதுக்கி விட்டு வேறு வாங்கி அணிகிறோம். சரீரத்தில் அணியும் உடைக்கு ஒப்பானது தான் இந்த சரீரமெனும் உடையும் என்று நம் முன்னோர்கள் விளக்குகின்றனர். உடல் என்பது ஜீவன் அணிந்திருக்கும் உடைதான். ஜீவனும் தன் சரீரமாகிய உடையை அடிக்கடி மாற்றிக்கொள்கிறது.
சிசு ஒன்று வளர வளர அதன் உடையும் அளவிலும் தரத்திலும் மாற்ற மடைகிறது. அதே போல, மனித ஜீவனும் அறிவிலும் அனுபவத்திலும் வளர்ச்சி அடையும்போது உடலை மாற்றிக்கொள்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நாம் அறியமுடியாதபடி ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு பகலும் உடல் வளர்ச்சி அடைகிறது. நாம் பெற்றுப் பெயரிட்ட குழந்தை வருடங்கள் செல்லச் செல்ல வளர்ந்து வாலிபமாகிறது. சிசுவான நம் குழந்தைதான் அது என்று உணர்ந்து கொள்கிறோமே ஒழிய சிசு தோற்றம் காணாமற் போய்விடுகிறது.
உயிர்களுக்கு உறக்கம் என்பது இரவில் தினசரி நிகழ்கிறது. மரணமும் ஒரு உறக்கம்தான். உயிர் வேறு உடல் பெற்றுக் கொள்கிறது. சிசு வளர்ச்சி புரிந்து கொள்ளும் மாற்றம். உயிர் வளர்ச்சி என்பது புரிந்துகொள்ள முடியாத ஒரு மாற்றம். இந்த வளர்ச்சி புழு, பூச்சி என்னும் உயிர்களாக ஆரம்பித்து, மன, அறிவு வளர்ந்து வளர்ந்து (பல ஜன்மத் தொடரில்) பிரும்ம நிலை வரையிலும் உயர்வு அடைவதாக நம் முன்னோர் சொல்கிறார்கள்.
1) தூக்கம் விழிப்புத் தொடரின் மூலம் உடலும் மனமும் வளர்ச்சி அடைகிறது.
2) மரண ஜனனத் தொடர்ச்சி மூலம் மனமும் அறிவும் வளர்ச்சி அடைகிறது.
3) அதன்பிறகு அறிவு எல்லையற்றதாக உயரும்போது மனம் நாசம் அடைகிறது.
ஆக, காற்புள்ளி, அரைப்புள்ளி, முற்ருப் புள்ளியாகத் தொடர்ந்து கதைகள் முடிவடைந்து விடுவதுபோல, தூக்கம் என்ற அரைப்புள்ளியும், மரணம் என்னும் முற்றுப் புள்ளியும் மோக்ஷம் அல்லது விடுதலை என்னும் முடிவில் கொண்டு போய் விடுகிறது.

No comments: