Monday, April 6, 2009

தாய்மை

வேதம் மாமிக்கு தற்சமயம் வயது அறுபதுக்குள் இருக்கும் நான்கு குழந்தைகள் பெற்றாள் என்றாலும், ஒரு மகன்தான் உயிரோடு இருந்தான். மற்ற மூன்று குழந்தைகளும் இரண்டு வயதிற்குள்ளாகவே வயிற்றில் கட்டி வளரும் நோய் வந்து மரணமடைந்து விட்டன. அதனால் குழந்தைகள் பெற்று வளர்ப்பது என்பதே ஒரு பயங்கரமான செயலாக அவள் உணர்ந்தாள். எந்த ஒன்றுக்கும் குற்றத்தை அவள் மேல் சுமத்தும் கணவன். அதனால் எது செய்தால் தவறாகி விடுமோ என்ற தயக்கம் காரணமாகத் தீர்மானம் செய்ய முடியாத ஒரு மனோ நிலை.


நல்ல வேளையாகக் குழந்தை மணி அதிகம் நோய் நொடியின்றி வளரலானான். கணவனுடைய குறை கூறும் சுபாவமும் குறையலாயிற்று. இந்த சமயத்தில் கணவன் நோய்வாய்ப்பட்டு மரணம் அடையத் தவித்துப் போனாள் வேதம் மாமி. குழந்தையோடு பிறந்தகத்தில் தஞ்சம் அடைந்தாள். கணவன் மூலம் கொஞ்சம் நிலபுலங்களும், ரொக்கப் பணமும் அவளுக்குக் கிடைத்ததால் சிரமம் இன்றி காலம் தள்ள முடிந்தது. தாய், அண்ணன், அண்ணன் குடும்பம் இவைகளோடு அவள் குடும்பமும் கலந்தது. அண்ணன் மேற் பார்வையில் பிள்ளை நிறையப் படித்தான். உத்தியோகத்தில் அமர்ந்தான்.
பிள்ளைக்கு வேலை கிடைத்ததும், அவள் தனிக் குடித்தனம் செய்ய ஆரம்பித்தாள். மணியின் ஒவ்வொரு செயலையும் ரசித்தாள். அன்பைப் பொழிந்தாள். மணியும் தாய் மேல் அளவற்ற பாசம் வைத்தான்.
வயதுக்கு ஏற்ப இப்பொழுதெல்லாம் அவன் வாலிபப் பெண்களைக் கண்டால் பரவசப் பட்டுப் போவதும், அவர்களோடு பேச, பழக விழைவதுமான நிலையில் வேதத்துக்கு தன்னை மகன் அலட்சியப் படுத்துகிறானோ என்று தோன்றலாயிற்று. வழி தவறி விடுவானோ என்றும் அஞ்சலானாள். இது பற்றி அண்ணனிடம் லேசாக பிரஸ்தாபித்தாள். அண்ணன் கல கலவென சிரித்து விட்டுச் சொன்னார், 'அவனுக்கு ஒரு நல்ல பெண் பார்த்துக் கல்யாணம் முடித்து விட்டால் போயிற்று. வயசுக் கோளாறு. அப்படித்தான் இருப்பான்'.
மகனுக்குக் கல்யாணம், மருமகள் வரவு, பிள்ளை அவளிடம் சாய்வது, தான் இரண்டாம் பட்சமாகிப் போவது, என்பதாக நினைக்கும் போது மனம் மிகவும் சங்கடப் பட்டது। என்றாலும், இவை எல்லாம் நடந்துதானே ஆக வேண்டும்? என்று சமாதானப் படுத்திக்கொண்டு அண்ணனிடம் பெண் பார்க்கும் படி சொல்லி, மகனின் ஜாதகத்தைக் கொடுத்தாள்।அழகும், குணவதியுமான லீலா என்ற பெண் மருமகளாக வாய்த்தாள். சகோதரியின் மனப் போக்கை அறிந்த அண்ணன், தன் மருமகனைத் தனியே அழைத்து, சில புத்திமதிகள் சொல்லி ஜாக்கிரதையாக நடந்து கொள்ளும்படி எச்சரித்திருந்ததால், மகன் தாயிடம் அளவுக்கு அதிகமான பாசத்தைக் காட்டியும், மனைவியை ரொம்பக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல பாவனை காட்டியும் வந்தான். தனித்திருக்கும் போது தன் கெடுபிடியெல்லாம் தாயாருக்காக நடிப்பபு என்று லீலாவிடம் சொல்லி இருந்ததால், அவளும் மிகவும் பயந்த சுபாவம் உள்ளவளாகக் காட்டிக் கொண்டாள்.

இந்நிலை வேதத்துக்கு மருமகளைக் காரணமின்றியே குறை கூறவும், சிடு சிடுக்கவுமான சுபாவத்தைக் கொடுத்தது। தன் செயல் அவளுக்கே தவறு என்று தெரிந்ததால், அவளுடைய குற்றமுள்ள நெஞ்சு, தன் மருமகள் தன்னைப் பற்றி புருஷனிடம் இரவு படுத்த பிறகு ஏதவது குறை கூறுவாளோ எனும் அச்சத்தை உண்டாக்கியது. விளைவு, வேதம் இரவில் அவர்கள் படுத்திருக்கும் அறையின் மூடிய கதவின் மர வாசல்படியில் தலையை வைத்துப் படுத்தபடியே தம்பதிகளின் பேச்சை ஒட்டுக் கேட்க வைத்தது. இவளைப் பற்றி குறைகள் காதில் விழுந்ததோ விழவில்லையோ, அவர்கள் சரச சல்லாப ஓசைகளைக் கேட்டதென்னவோ நிச்சயம்.

'பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்' என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு நாள் வேதம் அங்கு படுத்தபடியே தன்னை அறியாமல் தூங்கிப் போய் விட்டாள். சிறு நீர் கழிக்க எழுந்து வந்து கதவைத் திறந்த மருமகள் தன் மாமியாரைக் கண்டு திடுக்கிட்டாள். கணவனை எழுப்பிக் காண்பித்தாள். தாயின் இந்தச் செய்கை அவ்விருவருக்கும் திகைப்பையும், வெறுப்பையும் உண்டாக்கியது. மகன் தன் தாயாரை எழுப்பி "ஏன் இங்கு வந்து படுத்திருக்கிறாய்?" என்று கேட்டான். வேதத்துக்குக் கையும் களவுமாகத் தான் பிடிபட்டுவிட்டோம் என்னும் உண்மை புலப்பட்டது. சட்டென்று சமாளித்துக் கொண்டு "ஏனோ, எனக்கு பயமாக இருந்ததுடா, அதனால்தான் இங்கு வந்து படுத்தேன்" என்றள். "பயமாக இருந்தால் கதவைத் தட்டி என்னை எழுப்புவதுதானே" என்று கேட்டுவிட்டு, தங்கள் இருவரின் படுக்கைகளையும் தாயின் படுக்கைக்குப் பக்கத்தில் விரித்துக் கொண்டு தாயை ஆதரவாகக் கட்டிக் கொண்டு மகன் தூங்க வைத்தான்। வேதம் மனதுக்குள் மிகவும் அவமானமாக உணர்ந்தாள்.

மறுநாள், மகன் மூலம் மாமாவிற்கு எல்லா விஷயங்களும் தெரிந்தது. அதன் காரணமும் விளங்கியது. அன்று மாலை, தன் தாயை அழைத்துக் கொண்டு தங்கையின் வீட்டிற்கு வந்தார். "வேதம், நான் எல்லாவற்றையும் கேள்விப் பட்டேன். வாஸ்தவம்தான். நீ தனித்துப் படுத்துத் தூங்கியே பழக்கப் படாதவள். இனி நம் அம்மா உன்னுடனேயே, உனக்குத் துணையாக இருப்பாள். இனி நீ அவர்கள் படுக்கும் அறையின் படியில் தலைவைத்துப் படுக்க வேண்டாம்" என்று சொல்லிவிட்டுச் சென்றார். வேதம் வாயடைத்து நின்று கொண்டிருந்தாள்.

Wednesday, April 1, 2009

கவிதைகள்

அகலிகை

பிரஸவிக்கும் பசுவை வலம்வந்து
அரசனின் நிபந்தனைக்கேற்ப
அதற்குப் பொருள் கற்பித்து
அகலிகையை மணந்தான் முனிவன்;
முனிசாபத்துக்கு அஞ்சிய அரசன்
மணமுடித்துக் கொடுத்தான் மகளை.
உள்ளமும் விருப்பமும்
பெண்களுக்கும் உண்டு என்ற
எண்ணமே இருவருக்கும் இல்லை!



ஆசை கருகி ஆஸ்ரம வாழ்க்கையும்
அகமுடையான் சேவையும்
அகலிகைக்கு அமைந்தது- நிர்பந்தமாக;
ஆனாலும் என்ன?
அவள் அறியாக் குற்றத்துக்கு
கல்லாய் சபிக்கப் பட்டாள்.
+++++++++++++++++++++++++++++++++++









சீதையின் புலம்பல்

வில் வளைக்கும் மன்னருக்கே பெண் தருவேன் நான்என்று
சொல் முழக்கி சுயம்வரம் வைத்தார் தந்தை;
என் வயதோ பன்னிரெண்டு
என்ன கண்டேன் மணம் பற்றி?

ராமனைக் கரம்பற்றி ஸாகேதம் சென்றது
நான் ஒருத்தி மட்டுமா
மற்ற மூன்று சகோதரிகளும் கூட
ஒட்டுமொத்தமாய் தசரதபுத்திரர்களோடு திருமணம்.

மாமியார்களின் மௌனயுத்தம்
மாமனாருக்கோ கைகேயி இஷ்டம்
வனவாசம் சிறைவாசம்
என் வாழ்வே சர்வ நாசம்
என் தங்கை ஊர்மிளைதான்
என்ன சுகப்பட்டாள் கணவனிடம்
கணவன் வனம் போதல் அறிந்தவுடன் அவள் மூர்ச்சை
நெடுந்தூக்க வியாதியிலே
நினைவின்றிப் பிணம் போல
ஆண்டு பல நகர்ந்தாலும்
அவள் உறக்கம் தெளியவில்லை.


***********************************************