Monday, July 23, 2012

கணவன்-சிறுகதை
1967. அப்போது நான் சென்னையில் (திருவான்மியூரில்) என் இரண்டாவது மகனுடன் வசித்து வந்தேன். பெரிய மகள் வடக்கே நாட்டின் எல்லையில் தன் கணவனுடன் வசித்து வந்தாள். ஒரு நாள் மறுமகனிடமிருந்து கடிதம் வந்தது. அதில் என் மகளுக்கு குறைப் பிரசவம் ஆகியிருப்பதால் உதவிக்கு என்னை உடன் புறப்பட்டு வரச் சொல்லி எழுதியிருந்தாள் என் மகள். நான் புறப்பட்டவுடன் தகவல் கொடுத்தால் மறுமகன் டில்லி ரயில் நிலையம் வந்து கூட்டிச் செல்வார் என்றும் சொல்லியிருந்தாள்.

இரண்டொரு நாளில் நான் புறப்பட்டேன். நான் தனித்துப் பயணம் செய்தது கிடையாது; தயக்கமாக இருந்தது. மகனும் மறுமகளும் ரயில் நிலயம் வந்து நான் பயணம் செய்யும் பெட்டியில் யாராவது தமிழ் பேசுபவர்கள் டில்லிவரை செல்பவர் உள்ளனரா எனத் தேடினர். யாரும் இல்லை என்று தெரிந்ததும் எங்களுக்கெல்லாம் மிகவும் தயக்கமாக இருந்தது. அச்சமயம் அந்தப் பெட்டியில் பயணம் செய்யவிருந்த ஒரு வடநாட்டுப் பெண்மணி என் மகனிடம் ஆங்கிலத்தில் பேசி நிலைமையைத் தெரிந்து கொண்டார். பின்பு மகனிடம், “ நீங்கள் தைரியமாக உங்கள் தாயாரை என் பொறுப்பில் விட்டுவிடுங்கள். நான் டில்லி சென்று அங்கிருந்து காஷ்மீர் செல்கிறேன். டில்லியில் உங்கள் தாயாரை அவர் மறுமகன் வந்து அழைத்துச் செல்லும்வரை கூட இருந்து பார்த்துக் கொள்கிறேன்” எனச் சொல்லி தன் பக்கத்தில் என்னை அமர்த்திக் கொண்டார். வண்டி புறப்பட்டது. நான் அந்தப் பெண்மணியுடன் அறை குறை ஹிந்தியில் உரையாடிக்கொண்டிருந்தேன். அவர் தனது சொந்த ஊர் காஷ்மீர் என்றும், உறவினர்களைக் காண வந்திருந்தாகவும் சொன்னார். அமைதியாக மனதுக்குள் ஜபம் செய்தபடி பயணம் செய்தார்.

மறு நாள் இரவில் அந்தப்பெட்டியில் ஒரு வாலிபப் பெண் கைக்குழந்தையோடு ஏறினாள். அந்தப்பெண்ணும் காஷ்மீர்காரியும் சரளமாக ஹிந்தியில் பேசிக்கொண்டே வந்தனர். அந்தக் குழந்தை அக்காளுடையது என்றும் தனக்கு இன்னும் கலியாணம் ஆகவில்லை என்றும் அவள் சொன்னாள்.

சிலமணிநேரம் கழித்து வண்டி ஒரு ஊரில் நின்றபோது கணவனும் மனைவியுமாக இருவர் வண்டியில் ஏறினார்கள். நாங்கள் மூவரும் நீளவாட்டமான இருக்கையில் எதிர் எதிராக அமர்ந்திருந்தோம். அந்த மனிதரும் இளம் வயதுக்காரராகவே தோன்றினார்.தன் மனைவிக்கு ஜன்னலோரம் ஒற்றை இருக்கைகளின் நடுவில் தங்களது பெட்டி, படுக்கைகளை அடுக்கி, அதன் மேல் மெல்லிய மெத்தை விரித்துத் தலையணை வைத்து, பால் வாங்கிப் பருகச்செய்து, அன்போடும் ஆதரவோடும் அவளை உறங்கச்சொல்லிவிட்டுத் தான் மற்றவர்களோடு அமர்ந்தபடி மிக இயல்பாக பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தார். அவர் மனைவி உடனே உறங்கிப்போனாள். மௌ¢ளமௌ¢ள எல்லோரும் தூங்க பெட்டியில் பேச்சுச் சத்தம் குறைந்தொழிந்தது.

நான் மருமுறை கண்விழித்தபோது எதிர் இருக்கையில் இருந்த பெண்ணையும் குழந்தையும் காணாமல் இருந்ததோடு, அந்த ஆணையும் காணோம். அவர் மனைவி மட்டும் உறங்கிக் கொண்டிருந்தாள். நான் கலவரமாகி மேல் தட்டில் படுத்திருந்த அந்தக் காஷ்மீர் பெண்மணியைப் பார்த்தேன். சிரித்தபடி அவர் கீழே இறங்கி என்னருகில் வந்து அமர்ந்தார். நான் “ எங்கே அவர்களைக் காணோம்” என்று கேட்டேன். அதற்கு அவர் பூடகமான சிரிப்போடு, அவர்கள் முந்தைய ஸ்டேஷனில் இறங்கி விட்டார்கள். பாவம் இந்தப் பெண்; தூங்கிக்கொண்டேயிருக்கிறாள். அந்த ஆள் ஒரு அயோக்கியன் போல் தெரிகிறதுஎன்றாள். டில்லியில் தங்களை தனது மாமனார் காரில் வந்து அழைத்துப் போவார் என்று அந்த மனிதன் சொன்னது நினைவு வந்ததது.

டில்லி நெருங்கும் போது வீழித்துக் கொண்ட அந்தப் பெண் தன் கணவன் தன்னை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் வழியிலேயே இறங்கிச் சென்றுவிட்ட விஷயம் தெரிந்து கொண்டு அழத்தொடங்கி விட்டாள்.காஷ்மிர் பெண் அவளை சமாதானப்படுத்தி,டில்லி ரயில் நிலையத்தில் என்னை என் மறுமகனிடமும், அவளை அவளது தந்தையிடமும் ஒப்படைத்த பிறகே சென்றாள்.

வேஷம்-சிறுகதை

அது 1942ஆவது வருடம். நான் ஒரு வாடகை வீட்டில் வசிக்க நேர்ந்திருந்தது. சொந்த வீடு இருந்தும் சகோதரர்களுக்குள் சொத்துப் பிரித்தலான பிரச்சினை. பக்கத்து வீட்டில் மெலிந்த, அழகான ஒரு பெண் தன் மூன்று வயதுப் பெண் குழந்தையோடு வசித்து வந்தாள். அவள் கணவன் சப்ளையராக ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்தான். நாட்கூலி.(இரண்டு ரூபாய் என்று நினைக்கிறேன்). அதிலும் கூட அவள் காலோ, அறையோ உண்டியலில் போட்டு விட்டு மிகுதிப்பணத்தில் தான் குடும்பச் செலவு செய்வாள் என்பதாக நான் குடிவந்திருந்த வீட்டின் சொந்தக்காரியும் தாழ் வாரப் பகுதியில் வசிப்பவளுமான பொன்னம்மாள் சொன்னாள். அந்தப் பெண்ணின் கணவன் காலை ஐந்து மணிக்குக் கடைக்குச் சென்றால் இரவு மணி பத்துக்கு மேல் தான் வீடு திரும்புவான். அந்தப் பெண் அடிக்கடி இங்கு வந்து வீட்டுக்காரப் பென்மணியுடன் பேசிக் கொண்டிருப்பாள். தீபாவளி வந்தது. அவள் தனது கணவனுக்குக் கடையில் கொடுத்த சிறு போனஸ் பணத்தில் துணி மணிகள் வாங்கியதை கணவனுக்கு, தனக்கு, குழந்தைக்கு, மமியாருக்கு என்று சொல்லியபடி எங்களிடம் கொண்டுவந்து காட்டினாள்.

“உன் மாமியார் எங்கிருக்கிறார்? மைத்துனரிடமா?” என்று கேட்டேன்.

“இல்லை, என் வீட்டுக்காரர் ஒரே மகன். எங்கள் சொந்தக்காரர் வீட்டில் அவ்ர்களுக்கு உதவியாக இருந்து வருகிறார். தீபாவளிக்கு இங்கு வருவார்கள். ஒரு வாரம் போல் தங்கியிருப்பார்கள்” என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.

மறு நாள் அவள் சிறிய கையடக்கமான தாஜ்மஹால் படம் போட்ட மூடியுடைய ஒரு பெட்டியை வீட்டுக்கார அம்மாளிடம் கொடுத்தபடி அவளிடம் தணிந்த குரலில் ஏதோ சொல்லிவிட்டுச் செல்வதை நான் என் அறையில் இருந்தபடி கவனித்தேன்.

ஊரிலிருந்து அந்தப் பெண்ணின் மாமியார் வந்திருந்தார். அமைதியான, நடுத்தர வயதுடையவராக இருந்தார். தானும் தீபாவளிக்காக எல்லோருக்கும் புத்தாடைகள் எடுத்து வந்திருந்தார். அவை சற்று உயர்ந்த ரகம். குழந்தையைக் கொஞ்சி மகிழ்ந்தார். மறுமகளை உட்காரவைத்து விதவிதமாகச் சமைத்துப் போட்டார். தீபாவளிக்கு மணக்க மணக்க நெய் இனிப்புகள் செய்தார். இருவரும் ஓயாது பேசி மகிழ்ந்தனர்.

தீபாவளி கழிந்த மூன்றாம் நாள் அந்த அம்மாள் ஊர் செல்வதாக இருந்தது. ஆனால் அன்று அவருக்கு ஜுரம் வந்துவிட்டது. அரசாங்க வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்றனர். மூன்று வாரம் ஆகியும் காய்ச்சல் விட வில்லை. தனியார் வைத்தியசாலையில் காட்ட வசதி அவர்களுக்கு இல்லை. ஆனால் அப்போதெல்லாம் தர்மாஸ்பத்திரியானாலும் சிரத்தையுடன் கவனித்து வைத்தியம் செய்வார்கள். அந்த அம்மாளுக்கு ஊசியில் செலுத்தும் மருந்து தங்களிடம் இல்லை என்றும் வெளியிலிருந்து வாங்கி வரும்படியும் வைத்தியர் சொன்னதும் இவர்கள் கல்ங்கிப் போய்வ்ட்டனர்.

“போனஸ் பணம், மாமியார் கொண்டுவந்த பணம், என்று எல்லாம் செலவாகி விட்டது. இப்போது யாரைப் போய்க் கேட்பது? இவருக்கும் எனக்கும் கடன் கேட்டே பழக்கமில்லை” என்று எரிச்சல் கலந்தபடி அவள் பொன்னம்மாளிடம் கூறிக் கொண்டிருந்தாள். எப்படியோ மருந்து வாங்கி, ஊசி போட்டு, ஒரு வழியாக உடல் குணமாகி, வீடு மீண்டார் அந்தப் பெண்மணி.

ஊருக்குப் போகும் முன்தினம் மகள், குழந்தையுடன் சினிமா சென்றிருந்த சமயம் அந்த அம்மாள் எங்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் சொன்னார்,  “நான் வருடம் முழுவதும் அவர்கள் வீட்டில் உழைத்து ஓடாகிச் சம்பாதித்த பணம் துணி வாங்கியது போக முழுவதையும் இவளிடம்தான் கொடுக்கிறேன். எப்போதும் தீபாவளி முடிந்த இரண்டொரு நாட்களில் ஊர் திரும்பி விடுவேன். மாட்டுப் பெண்ணும் நல்லபடியாக நடந்து கொள்வாள். இந்தத் தடவை உடம்புக்கு வந்துவிட்டது. இவளுக்கு என்ன எரிச்சல்? சுடுசொல் எப்படி வெளிப்பட்டது தெரியுமா? கஞ்சிக்குப் பால் விடக்கூட மனதாக வில்லை. நான் இனி இங்கு எக்காரணம் பற்றியும் வரப்போவதில்லை. நான் வேலை செய்யும் இடத்தில் தலைவலி என்றால் கூட என்னை வேலை செய்ய விட மாட்டார்கள். நன்றாய் கவனித்துக்கொள்வார்கள்.”

மாமியார் ஊர் சென்ற மறுநாள் மருமகள் பொன்னம்மாளிடமிருந்து உண்டியல் பெட்டியை வாங்கிச் சென்றாள்.