Tuesday, December 10, 2013

15-மனக்கருவூலத்திலிருந்து

சைதாப்பேட்டையில் நான் வசித்தபோது நாங்கள் குடியிருந்த வீட்டின் பின்கட்டிற்கு ஒரு குடும்பம் குடிவந்தது. அந்தவீட்டில் வயதான ஒரு அம்மாள் இருந்தார். தன் வயது 85என்று சொன்னார். கணவரை இழந்தவர். ஒரு தினம் என்னிடம் வந்து அமர்ந்துகொண்டு என் கையைப் பிடித்துத் தன் தலையில் மூன்று நான்கு இடங்களைத் தொடும்படி செய்தார். பெரிய நெல்லிக்காய் அளவிற்கு புடைத்து இருந்தது. ‘இது ஏன்?' என்று கேட்டேன், ‘அந்தக்காலத்தில் நான் என்கணவரிடம் வாங்கிய குட்டுக்கள். தொடர்ந்து குட்டுப்பட்டுப் பட்டு புடைப்புகள் நிரந்தரமாகத் தங்கிவிட்டன' என்றார். கணவனிடம் அடிபட்டிராத எனக்கு ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருந்தது. ‘நீங்கள் என்ன குழந்தையா? ஏன் தடை செய்யாமல் ஏற்றுக்கொண்டீர்கள்' எனக் கேட்டேன்.
‘என்ன செய்வது? அவர் ஒரு ஊர்சுத்தி மனிதர். அதைப்பற்றிக்கேட்டால் அடி, உதை, குட்டு என ஆரம்பித்துவிடுவார். வயதாக ஆக எக்கேடும் கெட்டுப்போகட்டும் என்று கேட்பதை விட்டுவிட்டேன். அதன் பிறகுதான் வீட்டிலும் சற்று இருக்கத்தலைப் பட்டார். அதன்மூலம் நாலு குழந்தைகளையும் பெற்றுக்கொண்டேன்' என்று சர்வ சாதாரணமாகச் சொன்னார். எனக்கு இரண்டு மூன்று நாட்கள் வயிற்றில் ஒருவிதமாக சங்கடமாகவும் அந்த அம்மாளைப் பார்க்கும்போதெல்லாம் சங்கடமாகவும் இருந்தது.

-பிளாட்டில் வசித்த காலத்தில் (1990களின் தொடக்கம்)

ரமணன் வாங்கியிருந்த பிளாட்டின் மாடியில் அவன் வீட்டுக்கு நேர் மேல் பகுதியை ஒரு குடும்பம் வாங்கி வசித்துவந்தது. அந்தப் பிளாட்டில் வசித்தவர்களில் ஆறு குடும்பத்தின் ஆண்களும் ‘ராயல் என்ஃபீல்ட் கம்பெனியில்தான் வேலை பார்த்தனர். அந்தக் குடும்பத்து ஆணும் அதில்தான் வேலை செய்தார். மற்ற இருகுடும்பத்து ஆண்கள் வேறு இடத்தில் வேலை செய்தனர்.
மாடியில் வசித்தவர் சற்று அசடு. ஆனால் மனைவி கெட்டிக்காரி. அவளும் வேலைக்குச் செல்பவள். குடும்பத்தைத் திறமையாகக் கொண்டு செலுத்துபவளாக இருந்தாள். விபரம் பற்றாத கணவனை வழிநடத்துபவளாக செயல் பட்டாள். அவர்களுக்கு ஏழுவயதில் ஒரு மகன். பாராட்டவேண்டிய விஷயம் என்றாலும் அந்த ஆணுடன் வேலை செய்யும் மற்ற ஆண்கள் கூடும்போது அந்தப்பெண்ணைப்பற்றி கேவலமாகப்பேசி தூஷிப்பதில் திருப்தி அடைவார்கள். பெண்ணின் திறமையை ஆண்களால் சகிக்க முடியுமா?
பிளாட்டின் மேற்பார்வை வருடம் ஒருவர் என்பதாக தீர்மானமாகியிருந்தது. அந்த வருடம் ரவி என்பவரின் பொறுப்பில் இருந்தது. மாடியில் வசித்தவர்களின் செருப்புகள் படிகளின் ஓரத்தில் விடப்பட்டிருந்தன. இதைச்சாக்காக வைத்து அவர் அந்தப்பெண்ணிடம் எகத்துக்கும் சத்தம்போட்டு சண்டைப்பிடித்தார். அந்தப் பெண் பின்னர் என்னிடம் “வாயாய் வார்த்தையாய் என்னிடம் சொன்னால் எடுக்க மாட்டேனா? ‘ என்று சொல்லி அழுதபோது எனக்குப் பாவமாக இருந்தது. அதே தவறு மற்ற வீட்டுப் படிகளிலும் இருந்தபோதும் அவர் அவர்களுடன் ஏன் சண்டை போடவில்லை? ‘ஏழையைக்கண்டால் மோழையும் பாயும்' என்பதுபோல அப்பாவி அகமுடையானாக இருப்பதால் இந்த மனிதருக்கு இவ்வளவு துணிச்சல்  என்று நான் எண்ணிக் கொண்டேன்.
அந்தப்பெண் இரண்டொரு மாதங்களில் உடல்நலம் குன்றி இறந்து போனாள். சாதுவாக இருந்தாலும் சம்பாதிப்பவனாக இருந்ததால் அந்த ஆளை கல்யாணத் தரகன் பசப்பி அவரின் செலவிலேயே ஒரு ஏழையான முப்பதுக்கும் மேற்பட்ட வயதுடைய பெண்ணை மணமுடித்துக் கொடுத்தார். அந்தப் பெண்ணும் எங்கோ வேலை பார்ப்பதாகச் சொல்லிக்கொண்டனர். அவள் தினமும் இரவில் நேரம் கழித்துத்தான் வீடு திரும்புவாள். மூத்தாளின் மகனை எப்போது பார்த்தாலும் ‘தேவடியா மகனே'' என்று திட்டியும் அடித்தும் கொடுமைப்படுத்துவாள். அவள் கணவர் இது தாங்காமல் முதல் மனைவியின் தாயாரை அழைத்து அவருடன் மகனை அனுப்பிக் கொடுத்துவிட்டார். சில மாதங்களிலேயே அவள் எவனுடனோ ஓடிப் போய்விட்டாள்.

No comments: