Monday, July 23, 2012

கணவன்-சிறுகதை
1967. அப்போது நான் சென்னையில் (திருவான்மியூரில்) என் இரண்டாவது மகனுடன் வசித்து வந்தேன். பெரிய மகள் வடக்கே நாட்டின் எல்லையில் தன் கணவனுடன் வசித்து வந்தாள். ஒரு நாள் மறுமகனிடமிருந்து கடிதம் வந்தது. அதில் என் மகளுக்கு குறைப் பிரசவம் ஆகியிருப்பதால் உதவிக்கு என்னை உடன் புறப்பட்டு வரச் சொல்லி எழுதியிருந்தாள் என் மகள். நான் புறப்பட்டவுடன் தகவல் கொடுத்தால் மறுமகன் டில்லி ரயில் நிலையம் வந்து கூட்டிச் செல்வார் என்றும் சொல்லியிருந்தாள்.

இரண்டொரு நாளில் நான் புறப்பட்டேன். நான் தனித்துப் பயணம் செய்தது கிடையாது; தயக்கமாக இருந்தது. மகனும் மறுமகளும் ரயில் நிலயம் வந்து நான் பயணம் செய்யும் பெட்டியில் யாராவது தமிழ் பேசுபவர்கள் டில்லிவரை செல்பவர் உள்ளனரா எனத் தேடினர். யாரும் இல்லை என்று தெரிந்ததும் எங்களுக்கெல்லாம் மிகவும் தயக்கமாக இருந்தது. அச்சமயம் அந்தப் பெட்டியில் பயணம் செய்யவிருந்த ஒரு வடநாட்டுப் பெண்மணி என் மகனிடம் ஆங்கிலத்தில் பேசி நிலைமையைத் தெரிந்து கொண்டார். பின்பு மகனிடம், “ நீங்கள் தைரியமாக உங்கள் தாயாரை என் பொறுப்பில் விட்டுவிடுங்கள். நான் டில்லி சென்று அங்கிருந்து காஷ்மீர் செல்கிறேன். டில்லியில் உங்கள் தாயாரை அவர் மறுமகன் வந்து அழைத்துச் செல்லும்வரை கூட இருந்து பார்த்துக் கொள்கிறேன்” எனச் சொல்லி தன் பக்கத்தில் என்னை அமர்த்திக் கொண்டார். வண்டி புறப்பட்டது. நான் அந்தப் பெண்மணியுடன் அறை குறை ஹிந்தியில் உரையாடிக்கொண்டிருந்தேன். அவர் தனது சொந்த ஊர் காஷ்மீர் என்றும், உறவினர்களைக் காண வந்திருந்தாகவும் சொன்னார். அமைதியாக மனதுக்குள் ஜபம் செய்தபடி பயணம் செய்தார்.

மறு நாள் இரவில் அந்தப்பெட்டியில் ஒரு வாலிபப் பெண் கைக்குழந்தையோடு ஏறினாள். அந்தப்பெண்ணும் காஷ்மீர்காரியும் சரளமாக ஹிந்தியில் பேசிக்கொண்டே வந்தனர். அந்தக் குழந்தை அக்காளுடையது என்றும் தனக்கு இன்னும் கலியாணம் ஆகவில்லை என்றும் அவள் சொன்னாள்.

சிலமணிநேரம் கழித்து வண்டி ஒரு ஊரில் நின்றபோது கணவனும் மனைவியுமாக இருவர் வண்டியில் ஏறினார்கள். நாங்கள் மூவரும் நீளவாட்டமான இருக்கையில் எதிர் எதிராக அமர்ந்திருந்தோம். அந்த மனிதரும் இளம் வயதுக்காரராகவே தோன்றினார்.தன் மனைவிக்கு ஜன்னலோரம் ஒற்றை இருக்கைகளின் நடுவில் தங்களது பெட்டி, படுக்கைகளை அடுக்கி, அதன் மேல் மெல்லிய மெத்தை விரித்துத் தலையணை வைத்து, பால் வாங்கிப் பருகச்செய்து, அன்போடும் ஆதரவோடும் அவளை உறங்கச்சொல்லிவிட்டுத் தான் மற்றவர்களோடு அமர்ந்தபடி மிக இயல்பாக பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தார். அவர் மனைவி உடனே உறங்கிப்போனாள். மௌ¢ளமௌ¢ள எல்லோரும் தூங்க பெட்டியில் பேச்சுச் சத்தம் குறைந்தொழிந்தது.

நான் மருமுறை கண்விழித்தபோது எதிர் இருக்கையில் இருந்த பெண்ணையும் குழந்தையும் காணாமல் இருந்ததோடு, அந்த ஆணையும் காணோம். அவர் மனைவி மட்டும் உறங்கிக் கொண்டிருந்தாள். நான் கலவரமாகி மேல் தட்டில் படுத்திருந்த அந்தக் காஷ்மீர் பெண்மணியைப் பார்த்தேன். சிரித்தபடி அவர் கீழே இறங்கி என்னருகில் வந்து அமர்ந்தார். நான் “ எங்கே அவர்களைக் காணோம்” என்று கேட்டேன். அதற்கு அவர் பூடகமான சிரிப்போடு, அவர்கள் முந்தைய ஸ்டேஷனில் இறங்கி விட்டார்கள். பாவம் இந்தப் பெண்; தூங்கிக்கொண்டேயிருக்கிறாள். அந்த ஆள் ஒரு அயோக்கியன் போல் தெரிகிறதுஎன்றாள். டில்லியில் தங்களை தனது மாமனார் காரில் வந்து அழைத்துப் போவார் என்று அந்த மனிதன் சொன்னது நினைவு வந்ததது.

டில்லி நெருங்கும் போது வீழித்துக் கொண்ட அந்தப் பெண் தன் கணவன் தன்னை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் வழியிலேயே இறங்கிச் சென்றுவிட்ட விஷயம் தெரிந்து கொண்டு அழத்தொடங்கி விட்டாள்.காஷ்மிர் பெண் அவளை சமாதானப்படுத்தி,டில்லி ரயில் நிலையத்தில் என்னை என் மறுமகனிடமும், அவளை அவளது தந்தையிடமும் ஒப்படைத்த பிறகே சென்றாள்.

No comments: