Thursday, December 27, 2012

14-மனக் கருவூலத்திலிருந்து

செடி ஆசை


நான் மிகச் சிறியவளாக, நாலைந்து வயதாக இருக்கும்போது எங்கள் குடும்பம் எதிர்ச்சாரியில் உள்ள ஒரு வீட்டிற்குக் குடி போனது. அந்த வீட்டின் முன்புறம் கொஞ்சம் மண்தரை காலியாகவும், வீட்டின் முன்புறம் அந்தக் காலியிடத்தை வளைத்து சற்று உயரமான சுவரும் மூங்கில் கதவும் இருந்தன. என் தாய் அந்தக் காலியிடத்தில் அவரை, புடலை, பூஷிணி,பறங்கி, பீர்க்கு விதைகளை நட்டு அவற்றுக்கு தினமும் நீர் ஊற்றவும் சில நாட்களில் அவை முளைத்து இலைவிட ஆரம்பித்தன. இது எனக்குப் புதிய செய்தி. தினமும் காலையில் எழுந்தவுடன் செடிகள் அருகே சென்று அமர்ந்து கொண்டு வாஞ்சையுடன் அவற்றைத் தொட்டுத் தொட்டுப் பார்ப்பேன். அவை வளர்வதை ஒரு அதிசயமாகப் பார்த்து மகிழ்வேன். அவற்றுக்கு சிறு சிறு பந்தல் போட்டதும் அவை பந்தலில் ஏறின.

என் அம்மா எந்தச்செடியில் எந்தக்காய் காய்க்கும் என கடையிலிருந்து வாங்கிவரும் காயைக் காட்டி விளக்குவார். வீட்டுச் செடிக்காய் சாப்பிட வேண்டும் என மிகுந்தஆசையோடு இருந்தேன். ஆனால் என் தகப்பனாருக்கு சோழவந்தானென்னும் ஊரில் வேலைகிடைத்து பழநியிலிருந்து புறப்பட நேர்ந்தது. என் ஏமாற்றமும் அழுகையும் என்தாயையும் பாதித்தது. அவர் என்னை சமாதானப்படுத்தி அந்தக் கொடிகளிலிருந்து இளந் தளிர்களைப் பறித்து கூட்டு செய்து உண்ணச்செய்தார். இன்றும் அக் கூட்டு வழக்கமான கீரைக் கூட்டைவிட ருசியாக இருந்ததாகவே தோன்றுகிறது.

பிறகு, நான் வசிக்க நேர்ந்த வீடுகள் எதிலும் செடி போட வசதி இருக்க வில்லை. ஆனால் எனக்கு செடிகளின் மீது அளவற்ற ஆசை. வாசலிலும் கொல்லையிலும் வளரும் குப்பை செடிகளைப் பார்த்து மகிழ்வேன். திருமணம் ஆனபின் கணவன் வீடுவந்து சொந்த வீடு கட்டிய பின் வாசலிலும் கொல்லையிலும் நிறையச் செடிகள் வைத்தேன். மல்லிகைப் பந்தல் நிறைய மல்லிகை மலர் பூத்துக்குலுங்கும். அக்கம் பக்கத்தில் எல்லோருக்கும் கொடுப்பேன். கொல்லையில் பல்விமான காய்கள் ஏராளமாகக் காய்த்தன.

சொந்தவீட்டை விற்றபின் வசித்த எந்த வீட்டிலும் செடி வைக்க முடிந்த தில்லை. சைதாப்பேட்டை புஜங்கராவ் தெருவில் ஏழு குடித்தனத்துக்கு நடுவில் குடியிருந்தபோது கொல்லையில் அடுக்கு மல்லிசெடி ஒன்றை நட்டேன். அது பூக்க ஆரம்பிக்கும் சமயம் வீடு மாற்ற நேர்ந்துவிட்டது. அந்த மல்லிகைப் பூக்களை தொடுத்து அங்கு வசித்த மற்ற வீட்டுக் குழந்தைகள் எங்கள் வீட்டிற்கு என் பேத்தியுடன் விளையாட வந்தன. மனதில் ஒரு மெல்லிய வலி.

நங்கநல்லூரில் பிளாட்(flat) இல் வசித்தபோது (மகனின் சொந்த வீடு) வெளிச்சுவரில் காலியாக இருந்த மண்ணில் என்பேத்தியிடம் வாடிய ‘துலுக்க ஜவந்தி' பூவைக் கசக்கிக் கொடுத்து ‘அந்தக் குழியில் போட்டு தினமும் ஜலம் ஊற்றி வாருங்கள் செடி முளைத்துப் பூக்கும்' என்று சொன்னேன். அவ்வாறே அவர்கள் செய்யவும் செடி முளைத்து பூக்கவும் தொடங்கியது. அது நாள் வரை மற்றவர்களால் திரும்பியும் பார்க்கப்படாத அந்த இடம் கவனம் பெற்றது. மற்ற குடித்தன வீட்டுக் குழந்தைகள் அந்தப் பூக்களைப் பறித்துக்கொண்டு செடிக்கு சொந்தமும் கொண்டாட ஆரம்பித்தனர். பெரியவர்களும் அதற்கு துணைப் போயினர்.
பிளாட்டை விற்றுவிட்டு சிட்லபாக்கத்தில் நிலம் வாங்கி வீடு கட்டிய பிறகு வீட்டை சுற்றி நிறையச் செடிகள். பலவண்ண செம்பருத்தி பூ செடிகள். ரோஜா, நித்திய மல்லி, கனகாம்பரம், நந்தியாவட்டை, துளசி போன்ற செடிகளுடன் தென்னை, கொய்யா, ரஸ்தாளி வாழை, சாதா வாழை என்று எங்கும் பசுமையாக இருந்தது. ஆனால் வருடம் செல்லச் செல்ல பராமரிப்பும் கவனமும் குறைந்து அலட்சியம் மேலிட்டது. பாம்பு நடமாட்டம் அதிகரித்து விட்டது, உதிரும் இலை தழைகளால் நடப்பது இடைஞ்சலாக இருக்கிறது என்று சொல்லி என் மகன் எல்லா மரங்களையும் வெட்டிவிட்டான். இப்போது மிஞ்சுவது ஓரிரு தென்னையும், ஒரு வெள்ளைப்பூ செடியும்தான்.

Wednesday, December 26, 2012

13-மனக் கருவூலத்திலிருந்து

கவலையாக இருக்கிறது

    படிக்காத பெண்கள் என்றாலும், அக்காலப் பெண்கள் ஆன்மீகம் பற்றி ஒரு தெளிவோடு இருந்தனர். அந்தக் காலத்தில் வெளிப்பார்வைக்கு ஆண் ஆதிக்கமாகத் தோன்றினாலும் மனைவியைக் கலந்து கொள்ளாமல் எதிலும் தன்னிச்சையாக முடிவு எடுத்துவிட மாட்டார்கள். வீட்டோடு இருந்து சமைத்துப் போட்டு, குழந்தைகள் பெற்றதை அக்காலப் பெண்கள் இழிவாக நினைக்க வில்லை. அது தங்களுக்கு பாதுகாப்பான, பத்திரமான இடமாகக் கருதினார்கள். எந்த ஒரு விஷயத்தையும் நல்லதாகவும் எடுத்துக் கொள்ளலாம், கெட்டதாகவும் எண்ணலாம். குடித்தனமோ துரைத்தனமோ எதுவானாலும் அதிகாரம் கையில் இருந்தால் அகந்தையும் சர்வாதிகார மனோபாவமும் சிறிது சிறிதாக வளர்ந்து விடுகிறது. ஆதிகாலத்தில் சமூகத்தில் பெண்களை அதிகம் மதிப்போடுதான் வைத்திருந்தனர் என்று தெரிகிறது. ஆனால், காலக் கிரமத்தில் பெண்களின் அன்பும், இளகிய மனமும், பெற்றெடுத்த குழந்தை களின்மேல் அவர்களுக் கிருந்த பாசமும், தியாக மனோபாவமும், உழைப்பும் ஆண்களுக்குப் பெண்களை அடக்கி ஆளமுடியும் என்ற எண்ணத்தை உண்டாக்கிவிட்டது. பொறுமையும், அன்புமே பெண்களுக்கு விலங்காக மாறி விட்டது.

‘ஓடும் நாயைக் கண்டால் துரத்தும் நாய்க்குக் கொண்டாட்டம்' என்னும் பழமொழிக்கு ஏற்ப, பெண்களை மட்டம் தட்டுவதும், அவர்களின் உழைப்பைக் கண்டு கொள்ளாமல் அலக்ஷியமாகப் பேசுவதும், சாத்திரத்தின் பெயரால் அவர்களின் சுதந்திரத்தையும் ஆசைகளயும் நசுக்குவதும், அவர்களை அடிமைகள் போல பாவிப்பதும் நடைமுறைக்கு வந்தது. அதிகம் சாப்பிட்டால் பெண்ணுக்கு உடல் வலிமை வந்துவிடும் என்னும் பயமும், அவளைத் தொட்டு தனக்கு செலவு அதிகம் ஆகிவிடக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வும்தான் “உண்டி சுருங்கல் பெண்டிற்கழகு” என்று சொல்ல வைத்தது. அவ்வை ஒரு பெண்ணாக இருந்தபோதிலும் சொன்னத்தைச் சொல்லும் ஒரு கிளிப் பிள்ளையாகத்தான் இருந்திருக்கிறாள். கூறாமல் சன்யாசம் கொள்ளச் சொன்னவளுக்கு ஏறுமாறாக இருக்கும் ஆண்களைவிட்டு விலகி சுதந்திரமாக பெண்கள் வாழவேண்டும் என்று சொல்லத் தோன்றவில்லை.

பிள்ளைப் பெறுவதை ஒரு சாக்காக வைத்து, பெண்களைப் பள்ளத்தில் இறக்கி பரிதவிக்க வைப்பதைக் கண்டு மனம் வெறுத்த பெண்கள்தான் இன்று ‘பெண்ணியம்' என்னும் புரட்சிக்கொடி தூக்கியிருக்கின்றனர். இதன் விளைவு எதுவானாலும் ஆகட்டும்; அதனால் ஆண்குலத்துக்கும்தானே கேடு உண்டாகும் என்று துணிந்துவிட்டனர். இப்போதெல்லாம் படிக்காத, உத்தியோகம் பார்க்காத பெண்களைக் காண்பது குறைந்து வருகிறது. ஆனாலும் நெடுநாளயப் பழக்க வழக்கங்கள் மாறாமலேயே இருக்கிறது. ஆபீஸ் போகிறவள் ஆனாலும் அகமுடையானுக்கும், மாமன் மாமிக்கும் செய்ய வேண்டிய கடமைகளைத் தவிர்க்க முடிவதில்லை. ‘ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்' என்பதுபோல, இரண்டுபங்கு வேலைகள் செய்ய நேர்கிறது. உதறவோ எதிர்த்துப் பேசவோ பெண்களால் முடிவதில்லை.

மிகவும் துணிந்த பெண்களோ ‘ஆண் பல பெண்களுடன் உறவுகொள்வது இல்லையா அது போல நாங்களும் வாழ்வோம். நாங்களும் குழந்தை பெற்றுக் கொள்வதை செயற்கை முறையில் தவிர்த்து விட்டு சுதந்திரக் காதலில் ஈடு படுவோம்' என்று கிளம்புகின்றனர். இவையெல்லாம் எங்குபோய் முடியப் போக்¢றது என்று சொல்ல முடியவில்லை பயமாக, கவலையாக இருக்கிறது.

Friday, November 23, 2012

கரும் பலகைகள்-(பூரணி கதைகள்)சிறுகதைத் தொகுதி

கரும் பலகைகள்

அது ஒரு சதுரமான ஹால். ஹாலை ஒட்டி, வலது புறம் சந்து போன்ற ஒரு அறை. எதிர் புறம் ஹாலை ஒட்டி இரு அறைகள். அந்த அறைகளில் வாத்தியாரின் குடும்பம் வாசம். ஹாலின் நான்கு மூலைகளிலும் அங்கங்கு சேர் டேபிள், பெஞ்சுகள், சுவர்களில் கரும்பலகைகள். நான்கு வகுப்புகள் அங்கு நடக்கும். அந்த வாத்தியார்தான் ஹெட் மாஸ்டர். அவரின் மனைவி நான்காம் வகுப்பு ஆசிரியை. ஒன்று, இரண்டு வகுப்புகளுக்கு வெளியிலிருந்து இரண்டு பெண் ஆசிரியைகள் வருவார்கள். சந்து போன்ற நீண்ட அறையில் பாலர் வகுப்பு நடக்கும். அந்த வகுப்பூக்கு ஹெட்மாஸ்டரின் மூத்த மகள் மேரி ஆசிரியை. வயது 22 இருக்கலாம். அது கிரிஸ்துவ மதத்தார் நடத்தும் பள்ளி ஆதலால் ‘பைபிள்' பாடம் புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு என்ற மத போதனைப் படங்களும் உண்டு.

    வாத்தியாருக்கு ஆண் குழந்தை கிடையாது. இரண்டாவது மகள் ஜெசியும் மூன்றவது மகள் ரூபியும் ஹை ஸ்கூலில் படித்து வந்தனர். இரண்டாவது மகள் ஜெசியோடு அடிக்கடி ‘சிவா' என்னும் சக மாணவன் அவர்கள் வீட்டுக்கு வருவான். அந்த வாலிபன் கலகலப்பாக அவர்களோடு பழகுவான். பணக்காரப் பையன்.

    வகுப்பு நேரமாக இருந்தாலும் கூட அவன் வந்து விட்டால் மேரி உள்பட அந்தக் குடும்பமே அவனோடு பேச உட்கார்ந்துவிடும். பாடம் நடக்காது. வாத்தியார் குடும்பம் பொருளாதார வசதி குறைந்த குடும்பம். சிவா அவ்வப்போது  பொருள் உதவி செய்வான் என்று தோன்றியது. சிவா வந்தால் மேரி முகம் பூவாய் மலர்ந்துவிடும்.

    மேரிக்கு கலியாண முயற்சிகள் நடக்கலாயிற்று. முப்பது வயதுடைய தொழிலதிபர் ஒருவர் பெண் கேட்டு வந்தார். முதல் மனைவி ஒரு பெண் குழந்தையை விட்டுவிட்டுச் செத்துப் போய் விட்டதாகவும், ஆனாலும் ஆள் அம்பு நிறைய  இருப்பதால் அந்தக் குழந்தையை மேரி கவனிக்கத் தேவை இல்லை என்றும் சொன்னார்.

வாத்தியார் குடும்பத்திற்கு பூரண திருப்தி. ஆனால் மேரிக்கு விருப்பம் இல்லை. அழத் தொடங்கி விட்டாள். கல்யாண ஏற்பாடுகள் நடக்க ஆரம்பிக்கவும் சிவாவின் வருகை அநேகமாக நின்று விட்டது.

ஒரு நாள் வாத்தியாரம்மாள் பக்கத்து வீட்டுக்காரியிடம் சொல்லிக் கொண்டு இருந்தாள் “நடக்க முடியாததற்கு ஆசைப்பட்டால் முடியுமா? இந்த மாப்பிள்ளைக்கு என்ன குறை? ஏகமான சொத்து. ரூபியின் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறார்'' என்று.

கல்யாணம் சிறப்பாக நடந்தது. சர்ச்சுக்கு நாங்கள் மாணவியர் எல்லோரும் சென்றிருந்தோம். பிறகு என் படிப்பு நின்று, கல்யாணமாகி, நான் கணவன் வீடு சென்று விட்டேன்.

சில வருடங்கள் சென்று நான் பிறந்த வீடு வந்திருந்தேன். என் பள்ளித் தோழி பட்டு என்னைக் காண வந்திருந்தாள். வாத்தியார் குடும்பத்தைப் பற்றி நலம் விசாரித்தேன். பட்டு வருத்தமாகச் சொன்னாள், “பாவம், மேரி செத்துப் போய் விட்டாள். அவள் புருஷன் மிகவும் கெட்டவனாம். மூத்த மனைவியை அவன் தான் கொன்றனாம். மேரியை மிக மிகக் கொடுமைப்படுத்தி, அவள் தங்கை ரூபியையும் கெடுத்து, அடித்து இருவரையும் மிகவும் துன்பப் படுத்தினானாம். ரூபியை அவனுக்குத் தெரியாமல் யாருடனோ பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, தூக்கு மாடிக் கொண்டு செத்துவிட்டாள்''.

இவைகளைக் கேள்விப்பட்டு நான் கலங்கி அப்படியே நின்று விட்டேன்.


Wednesday, September 19, 2012

12-மனக் கருவூலத்திலிருந்து

நல்ல/கெட்ட சகுனம்

    நல்ல சகுனம் பார்த்துக் காரியங்களைத் தொடங்குதல் என்பது மனதுக்கு ஒரு அமைதியை, சந்தோஷத்தைத் தருகிறது என்பது உண்மைதான். ஆனால் அபசகுனமாகத் தான் பிறரால் உணரப்படும்போது அந்த மனம் என்னபாடு படுகிறது என்பது அந்த நிலையை அனுபவித்தவருக்குத்தான் தெரியும்.

‘பல்லி' சகுனங்கள்

    முன்பு எப்போதோ ஒரு புத்தகம் படிக்கக் கிடைத்தது. அது பல்லி சாத்திரப் புத்தகம். படிக்க ரசமாக இருந்தது. அதில் ஒரு செய்யுள்:

முன்னாவது வலமாவது
மொழியின் திருவருளாம்
பினாவது இடமாவது
பேசும்குரல் பல்லி
சொன்னால் அதை
உமை கேளென
அரனார் மொழிகுவதால்
பொன்னாவது பொருளாவது
உயிராவது போமே
    இது தவிர, பல்லி விழுதலின் பலன், பல்லி எத்தனை முறை சப்தம் செய்கிறது என்ற எண்ணிக்கைக்குத் தக்க பலன் என்பதுபோன்ற பல விவரங்கள் செய்யுள் வடிவில் இருந்தன. ஒருநாள் என் தலையில் பல்லி விழுந்தது. பலன் பார்த்தேன். ‘தலை கலகம்' என்றும், ‘சிகை மரணம்' என்றும் எழுதியிருந்தது. சிகையில்லாமல் தலை இருக்கமுடியுமா? என்ன நடக்கிறது பார்க்கலாம் என்று காத்திருந்தேன். எதுமே நிகழவில்லை. பல்லிகள் வலப்புறச் சுவரில் அமர்ந் திருக்கும்போது சப்தமிட்டுவிட்டு இடப்புற சுவருக்கு நகர்ந்தும் சப்தமிடுகின்றன. ஒரே நாளில் சில மணி இடைவெளிகளில் சப்தமிடுகிறது. இதில் எதை எடுத்துக் கொள்வது? ஆக, இந்தப் பல்லி ஜோசியம் குழந்தைகள் விளையாட்டு என்று தீர்மானித்துக் கொண்டேன்.

    ஒரு முறை நான் பூக்காரியைக் கூப்பிட்டுப் பூ வாங்கினேன். என் மறுமகள் அந்தப் பூச்சரம் முழுவதையும் சுவாமி படத்திற்கு சாற்றி விட்டாள். நான், ‘நீ ஏன் பூ வைத்துக் கொள்ளவில்லை?' என்று வினவினேன். ‘நீங்கள் விதவைப் பெண்ணிடம் பூ வாங்கினீர்கள். அவள் எதிரில் அதைச் சொல்ல முடியாமல் பேசாதிருந்தேன். சுமங்கலிகள் விதவையிடம் பூவாங்கி வைத்துக் கொள்ளக் கூடாது அல்லவா?' என்று பதில் சொன்னாள் மறுமகள். எனக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. கணவனை இழந்த ஒரு பெண் ஒரு தொழில் செய்துகூடப் பிழைக்க முடியாதா? என்ற எண்னமும், நாம் இவ்வாறான பெண்களிடம் தானே பூ வாங்கி வைத்துக் கொள்கிறோம். நமக்கு ஒன்றும் நேர்ந்து விடவில்லையே! இந்தக் கிழவயதிலும் சுமங்கலியாகத்தானே இருக்கிறோம் என்றும் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

    மகனும் மறுமகளும் சம்பளம் வாங்கி வந்தால் என் கணவரையும் என்னையும் சேர்த்து நிற்கவைத்து தட்டில் சம்பளப் பணத்தை வைத்து எங்களிடம் கொடுத்து நமஸ்காரம்செய்து, பின் அதை வாங்கிக் கொள்வார்கள். என் கணவர் சற்று மூளைக் கலக்கமாக இருந்தார். தட்டில் இருக்கும் பணக் கட்டை எடுத்து எண்ணத் தொடங்கிவிடுவார். கடை முதலாளியாய் இருந்த போது பணம் புழங்கிய பழக்க தோஷம். என் மகன் அவர் கையிலிருந்து அதை வெடுக் என்று பிடுங்கிக் கொள்வான். நான் மனதிற்குள் ‘எண்ணிப்பார்க்க அனுமதித்தால்தான் என்ன? பணத்தைத் தின்றா விடுவார்?' என்று சிரித்துக் கொள்வேன். அவர் காலமான பிறகு அந்த நாடக அரங்கேற்றம் நின்று விட்டது.

    சாதாரணமாக சகுனம் பார்ப்பவர்களும் கூட, பெற்ற தாயிடம் சகுனம் பார்க்கக் கூடாது என்பதாக சாத்திரம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வீட்டின் சுபகாரியங்களின் துவக்கத்தில் மஞ்சள் பூசிய இரண்டு தேங்காய் களை விதவையானாலும் தாயாரிடம் கொடுத்து நமஸ்கரித்து வாங்கிக் கொள்வது வழக்கம். ஆனாலும் சகுன நம்பிக்கை உள்ளவர்களுக்கு அவ்விடத்திலும் சகுனம் பார்க்கத் தோன்றிவிடுகிறது.

11-மனக்கருவூலத்திலிருந்து

சைதை நினைவுகள்
   
நான் சைதாப்பேட்டையில் வசித்தபோது குடியிருந்த தெருவுக்கு ‘புஜங்கராவ் தெரு' என்று பெயர். அந்தத் தெரு முடியும் இடத்தில் குறுக்காக ஒரு தெரு போகும். அது தாண்டி புஜங்கராவ் தெரு ஒரு சந்தாகத் தொடரும். அந்த சந்துக்கு ‘சாமியார் தோட்டம்'என்று பெயர் என்பதாக நினைவு. அதில் பெரும்பாலும் ஹரிஜனங்களும், பிராமணர் அல்லாத வேறு சில ஜாதிக் காரர்களும் குடிசைகளிலும் சிறு ஓட்டுவீடுகளிலும் வசித்து வந்தனர்.  புஜங்க ராவ் தெருவில் அனேகமாக பிராமணக் குடியிருப்புகள்தான். மாலை நேரங்களில் அந்த சந்துத்தெரு குழந்தைகள் புஜங்கராவ தெருவுக்கு விளையாட வந்து விடுவார்கள். பிராமணக் குழந்தைகளும் அதில் சேர்ந்து கொள்வார்கள். எனக்குத் தெரிந்து எந்தப் பெரியவரும்  இதை ஆக்ஷேபித்ததோ தடை செய்ததோ கிடையாது.

ஒருநாள் ஒரு சிறுவனுடைய பத்துப் பைசா காசு காணாமல் போய் விட்டது. சிறுவன் பலமாக அழத் தொடங்கினான். எல்லாப் பிள்ளைகளையும் ஒன்று சேர்த்தி நிறுத்தினான் வேலு என்னும் ஒரு சிறுவன். ஒவ்வொரு வரையும் சோதனை போட்டான். கண்ணன் என்னும் பிராமண சிறுவனிடமிருந்து காசு கண்டுபிடிக்கப்பட்டது. சோதனை போட்ட பையன் ‘தூ' என்று காறித் துப்பினான். பின்பு, “ ஏண்டா! பாப்பாரப் பிள்ளையாக இருந்துகிட்டு இப்படி காசு திருடலாமா?” என்று கேட்டான். கண்ணன் வெட்கித் தலைகுனிந்தான். பின்னர் வேலுவிடம் கெஞ்சலாக, “சித்த இருங்கடா நான் இதோ வந்து விடுகிறேன்” என்று சொல்லித் தன் வீட்டுக்கு விரைந்தான். திரும்பி வந்தவனிடம் ஒரு ஐந்து பைசா நாணயம் இருந்தது. அழும் பையனிடம் கொடுத்து “இதையும் வெச்சுக்கோடா! என்னப்பத்தி நீங்க யாரும் யாருகிட்டயும் சொல்லாதீங்கோ நான் ஏதோ கிறுக்குத்தனமா காசை எடுத்துட்டேன்” என்று தாழ்வாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.
    என் வீட்டுத் திண்ணையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, அந்தப் பிள்ளைகளின் கட்டுப்பாடும் ஒற்றுமையும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது.
மற்றொரு நாள்
    அன்றுபோலவே இன்றும் நான் திண்ணையிதான் உட்கார்ந்திருந்தேன். அதே பையன்களின் கூட்டம். வெயிற்காலமாதலால் மாலையானாலும் புழுக்கமாக இருந்தது. வேலு என்னிடம் வந்து, “மாமி ரொம்ப தாகமாயிருக்குது குடிக்கக் கொஞ்சம் தண்ணி தருவீங்களா?” என்று கேட்டான். நான் பெரிய எவர்சில்வர் பாத்திரத்தில் ஜலமும் அதற்குள் ஒரு டம்ளரும் போட்டுக் கொடுத்தேன். வேலு தான் முதலில் குடித்துவிட்டு பின்பு மற்றவர்களுக்கும் கொடுத்தான். எல்லோரையும் கூட்டிவைத்துக் கொண்டு இரகசியமாக ஏதோ சொன்னான். மொத்தப்பசங்களும் அங்கிருந்து ஓடிவிட்டதுகள், என் பாத்திரம் டம்ளர் சகிதம்! எனக்கு ‘திக்' என்று ஆகியது. நேரம் ஓடியது அவர்கள் யாரும் கண்ணிலேயே படவில்லை. பாத்திரம் போனது போனதுதான் என்று எண்ணியவாறு எழுந்து உள்ளே சென்றேன். சற்று நேரத்தில் வீதியில் வேலு வந்து ‘மாமி' என்று குரல் கொடுத்தான். நான் திரும்ப வீட்டு வாயிலுக்கு வந்தவுடன் வேலு ‘கலகல' வென்று சிரித்தபடி பாத்திரத்தைக் கொடுத்தான். பின்பு, “பயந்துடீங்களா? சும்மா உங்ககிட்ட கொஞ்சம் தமாசு செஞ்சேன்” என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டான்.
மீண்டும் ஒரு நாள்
   
தேர்தல் நேரம். அன்று மாலையிலும் சிறுவர்கள் தெருவில் கூடினார்கள். அன்று வேலுவைக் காணோம். அவன் தன் அத்தை வீடு போயிருப்பதாக அவர்கள் பேசிக்கொண்டார்கள். இரண்டு சிறுவர்களின் கையில் சாக்கட்டி இருந்தது. ஒருவன் தார் சாலையில் எழுதினான், “ஏய் அம்பட்டப் பயலே நீ தோத்துத்தான் போவே” இன்னொருவன் “ஏய் மலையாளப் பறப்பயலே நீ தோக்கத்தான் போறே” இருவருக்கும் தகராறு வெடித்தது. ‘நீ கண்டியா அம்பட்ட சாதி எண்டு? நீ கண்டியா பறசாதியெண்டு?' என்பதாக கூட்டம் இரு பிரிவாக சண்டையிடத் தொடங்கியது. எங்கிருந்தோ வந்தான் வேலு. எல்லோரையும் அடக்கினான். பிறகு, சாக்கட்டி எழுத்தையெல்லாம் தன் கால்களால் தேய்த்து அழித்தான். ‘இனி இந்த மாதிரியெல்லாம் எழுதினீங்களோ போலிஸ்காரனைக் கூப்பிட்டு ஒதைக்கச் சொல்வேன்' என்று சத்தம்போட்டான். சிறுவர்கள் எல்லோரும் பிடித்தனர் ஓட்டம்.
வேலைக்காரி
 நாங்கள் குடியிருந்த வீட்டுச் சொந்தக்கரியின் பெயர் பத்மா. அய்யங்கார் குடும்பம். அவளது கணவருக்கு ஏதோ ஒரு கம்பனியில் உத்யோகம்.  ரமணி, பரத் என்று  இரண்டு ஆண் பிள்ளைகள். ரமணி கிரிகெட் ஆட்டத்தில் திறமைசாலி அவனிடம் விளையாட வென்று ஒரு குழுவே இருந்தது. வீட்டுத் தாழ்வாரத்தில் விளையாடுபவர்களின் அனைத்துப் பொருள்களும் குவிந்திருக்கும். அவன் பெரிய அளவில் வருவான் என்று பத்மா நம்பினாள். ஆனால் அது நிகழவில்லை. அவனது ஆட்டத்தில் மயங்கி ஒரு ஐயங்கார் பெண் அவனை காதலித்து, திருமணம் செய்துகொண்டாள்.
    பத்மா விட்டுக்கும் என் வீட்டுக்குமாக சுமார் பதினெட்டு வயது மதிக்கத் தக்க மாத்துவ பிராமணப் பெண் ‘பத்து'ப் பாத்திரம் தேய்க்கும் வேலை செய்து வந்தாள். அழகி, நக்மா சாயலில் உயரமாக இருப்பாள். மிகவும் ஏழைக்குடும்பம். அம்மா, அப்பா, இரண்டு தம்பிகள், ஒரு தங்கை கொண்டது. எங்கள் இருவருக்குமே அவள்மீது ஒரு அனுதாபம். நான் காலையில் காப்பியும் டிபனும் கொடுத்துவிடுவேன். பிற்பகலில் பத்மா அவளை தன் வீட்டில் உட்காரவைத்து சூடாக நெய்யுடன் சாப்பாடு போடுவாள். மாலையில் காபியும் தருவாள். அந்தப் பெண்ணும் நன்றாக வேலை செய்வாள். ஒரு நாள் பத்மா வெளியில் சென்றிருந்த தால் மாலை காபி அந்தப் பெண்ணுக்கு கொடுக்கப்படவில்லை.  மறுநாள் அந்தப் பெண் வேலைக்கு வரவில்லை. நானும் பத்மாவும் அவளுக்கு உடல் நலக் குறைவோ என்று யோசித்து அவள் வீட்டுக்குச் சென்றோம். அந்தப் பெண் போர்த்திப் படுத்திருந்தது. அவளது தந்தை, “அவள் இனிமேல் வேலைக்கு வரமாட்டாள். நீங்கள் அவளுக்குக் காப்பிக்கு சில்லரையாவது கொடுத்துவிட்டுப் போக வேண்டாமா?” என்று சத்தம் போட்டார். பத்மா பதிலுக்கு, “இது என்ன பேச்சு? சாதாரணமாக வேலைகாரிக்கு காலையில் ஒரு காப்பி கொடுப்பது தான் வழக்கம். சம்பளத்தைக் கூட்டித் தருவதால் யாரும் இப்போதெல்லாம் சாப்பாடு (பழையது) கூடத் தருவது வழக்கம் இல்லை. நாங்கள் இருவரும்தான்  பிராமணப்பெண் என்று பரிதாபப் பட்டு கொடுக்கிறோம் வெளியில் போவ தென்றாலும் கொடுத்துவிட்டு போக வேண்டும் என்று சட்டமா? என்று கேட்டாள். அந்தப் பெண்ணின் பெற்றோர் கூச்சலிட்டு சண்டைபோடவும் நாங்கள் அங்கிருந்து வந்துவிட்டோம்.
    மாலையில் அந்தப் பெண் எங்கள் வீட்டுக்கு வந்து அழுதபடி, “எங்கள் வீட்டாருக்கு நான் நல்ல சாப்பாடு சாப்பிடுவது பொறுக்கவில்லை. சாப்பிடாதே சம்பளத்தைக் கூட்டித்தரச்சொல் என்று மிரட்டுகிறார்கள்” என்று சொன்னாள். நாங்கள் இருவரும் அவளுக்குச் சேரவேண்டிய சம்பளப் பணத்தை முழுவதுமாகக் கொடுத்து வேலையிலிருந்து நிறுத்திவிட்டோம். அவள் என்னிடம் அவ்வப்போது கொடுத்துவைத்திருந்த பணம் ரூபாய் இருபதையும் கொடுத்து அனுப்பிவிட்டேன்.
அந்தப் பெண் காசுக்குத் தன் உடலை விற்பவள் என்றும் சாமியார் தோட்டத்து ஆண்கள் அவளது வாடிக்கையாளர்கள் என்றும் பின்னர் தெரியவந்தபோது  மிகவும் அருவெறுப்பாக உணர்ந்தேன்.

Monday, July 23, 2012

கணவன்-சிறுகதை
1967. அப்போது நான் சென்னையில் (திருவான்மியூரில்) என் இரண்டாவது மகனுடன் வசித்து வந்தேன். பெரிய மகள் வடக்கே நாட்டின் எல்லையில் தன் கணவனுடன் வசித்து வந்தாள். ஒரு நாள் மறுமகனிடமிருந்து கடிதம் வந்தது. அதில் என் மகளுக்கு குறைப் பிரசவம் ஆகியிருப்பதால் உதவிக்கு என்னை உடன் புறப்பட்டு வரச் சொல்லி எழுதியிருந்தாள் என் மகள். நான் புறப்பட்டவுடன் தகவல் கொடுத்தால் மறுமகன் டில்லி ரயில் நிலையம் வந்து கூட்டிச் செல்வார் என்றும் சொல்லியிருந்தாள்.

இரண்டொரு நாளில் நான் புறப்பட்டேன். நான் தனித்துப் பயணம் செய்தது கிடையாது; தயக்கமாக இருந்தது. மகனும் மறுமகளும் ரயில் நிலயம் வந்து நான் பயணம் செய்யும் பெட்டியில் யாராவது தமிழ் பேசுபவர்கள் டில்லிவரை செல்பவர் உள்ளனரா எனத் தேடினர். யாரும் இல்லை என்று தெரிந்ததும் எங்களுக்கெல்லாம் மிகவும் தயக்கமாக இருந்தது. அச்சமயம் அந்தப் பெட்டியில் பயணம் செய்யவிருந்த ஒரு வடநாட்டுப் பெண்மணி என் மகனிடம் ஆங்கிலத்தில் பேசி நிலைமையைத் தெரிந்து கொண்டார். பின்பு மகனிடம், “ நீங்கள் தைரியமாக உங்கள் தாயாரை என் பொறுப்பில் விட்டுவிடுங்கள். நான் டில்லி சென்று அங்கிருந்து காஷ்மீர் செல்கிறேன். டில்லியில் உங்கள் தாயாரை அவர் மறுமகன் வந்து அழைத்துச் செல்லும்வரை கூட இருந்து பார்த்துக் கொள்கிறேன்” எனச் சொல்லி தன் பக்கத்தில் என்னை அமர்த்திக் கொண்டார். வண்டி புறப்பட்டது. நான் அந்தப் பெண்மணியுடன் அறை குறை ஹிந்தியில் உரையாடிக்கொண்டிருந்தேன். அவர் தனது சொந்த ஊர் காஷ்மீர் என்றும், உறவினர்களைக் காண வந்திருந்தாகவும் சொன்னார். அமைதியாக மனதுக்குள் ஜபம் செய்தபடி பயணம் செய்தார்.

மறு நாள் இரவில் அந்தப்பெட்டியில் ஒரு வாலிபப் பெண் கைக்குழந்தையோடு ஏறினாள். அந்தப்பெண்ணும் காஷ்மீர்காரியும் சரளமாக ஹிந்தியில் பேசிக்கொண்டே வந்தனர். அந்தக் குழந்தை அக்காளுடையது என்றும் தனக்கு இன்னும் கலியாணம் ஆகவில்லை என்றும் அவள் சொன்னாள்.

சிலமணிநேரம் கழித்து வண்டி ஒரு ஊரில் நின்றபோது கணவனும் மனைவியுமாக இருவர் வண்டியில் ஏறினார்கள். நாங்கள் மூவரும் நீளவாட்டமான இருக்கையில் எதிர் எதிராக அமர்ந்திருந்தோம். அந்த மனிதரும் இளம் வயதுக்காரராகவே தோன்றினார்.தன் மனைவிக்கு ஜன்னலோரம் ஒற்றை இருக்கைகளின் நடுவில் தங்களது பெட்டி, படுக்கைகளை அடுக்கி, அதன் மேல் மெல்லிய மெத்தை விரித்துத் தலையணை வைத்து, பால் வாங்கிப் பருகச்செய்து, அன்போடும் ஆதரவோடும் அவளை உறங்கச்சொல்லிவிட்டுத் தான் மற்றவர்களோடு அமர்ந்தபடி மிக இயல்பாக பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தார். அவர் மனைவி உடனே உறங்கிப்போனாள். மௌ¢ளமௌ¢ள எல்லோரும் தூங்க பெட்டியில் பேச்சுச் சத்தம் குறைந்தொழிந்தது.

நான் மருமுறை கண்விழித்தபோது எதிர் இருக்கையில் இருந்த பெண்ணையும் குழந்தையும் காணாமல் இருந்ததோடு, அந்த ஆணையும் காணோம். அவர் மனைவி மட்டும் உறங்கிக் கொண்டிருந்தாள். நான் கலவரமாகி மேல் தட்டில் படுத்திருந்த அந்தக் காஷ்மீர் பெண்மணியைப் பார்த்தேன். சிரித்தபடி அவர் கீழே இறங்கி என்னருகில் வந்து அமர்ந்தார். நான் “ எங்கே அவர்களைக் காணோம்” என்று கேட்டேன். அதற்கு அவர் பூடகமான சிரிப்போடு, அவர்கள் முந்தைய ஸ்டேஷனில் இறங்கி விட்டார்கள். பாவம் இந்தப் பெண்; தூங்கிக்கொண்டேயிருக்கிறாள். அந்த ஆள் ஒரு அயோக்கியன் போல் தெரிகிறதுஎன்றாள். டில்லியில் தங்களை தனது மாமனார் காரில் வந்து அழைத்துப் போவார் என்று அந்த மனிதன் சொன்னது நினைவு வந்ததது.

டில்லி நெருங்கும் போது வீழித்துக் கொண்ட அந்தப் பெண் தன் கணவன் தன்னை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் வழியிலேயே இறங்கிச் சென்றுவிட்ட விஷயம் தெரிந்து கொண்டு அழத்தொடங்கி விட்டாள்.காஷ்மிர் பெண் அவளை சமாதானப்படுத்தி,டில்லி ரயில் நிலையத்தில் என்னை என் மறுமகனிடமும், அவளை அவளது தந்தையிடமும் ஒப்படைத்த பிறகே சென்றாள்.

வேஷம்-சிறுகதை

அது 1942ஆவது வருடம். நான் ஒரு வாடகை வீட்டில் வசிக்க நேர்ந்திருந்தது. சொந்த வீடு இருந்தும் சகோதரர்களுக்குள் சொத்துப் பிரித்தலான பிரச்சினை. பக்கத்து வீட்டில் மெலிந்த, அழகான ஒரு பெண் தன் மூன்று வயதுப் பெண் குழந்தையோடு வசித்து வந்தாள். அவள் கணவன் சப்ளையராக ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்தான். நாட்கூலி.(இரண்டு ரூபாய் என்று நினைக்கிறேன்). அதிலும் கூட அவள் காலோ, அறையோ உண்டியலில் போட்டு விட்டு மிகுதிப்பணத்தில் தான் குடும்பச் செலவு செய்வாள் என்பதாக நான் குடிவந்திருந்த வீட்டின் சொந்தக்காரியும் தாழ் வாரப் பகுதியில் வசிப்பவளுமான பொன்னம்மாள் சொன்னாள். அந்தப் பெண்ணின் கணவன் காலை ஐந்து மணிக்குக் கடைக்குச் சென்றால் இரவு மணி பத்துக்கு மேல் தான் வீடு திரும்புவான். அந்தப் பெண் அடிக்கடி இங்கு வந்து வீட்டுக்காரப் பென்மணியுடன் பேசிக் கொண்டிருப்பாள். தீபாவளி வந்தது. அவள் தனது கணவனுக்குக் கடையில் கொடுத்த சிறு போனஸ் பணத்தில் துணி மணிகள் வாங்கியதை கணவனுக்கு, தனக்கு, குழந்தைக்கு, மமியாருக்கு என்று சொல்லியபடி எங்களிடம் கொண்டுவந்து காட்டினாள்.

“உன் மாமியார் எங்கிருக்கிறார்? மைத்துனரிடமா?” என்று கேட்டேன்.

“இல்லை, என் வீட்டுக்காரர் ஒரே மகன். எங்கள் சொந்தக்காரர் வீட்டில் அவ்ர்களுக்கு உதவியாக இருந்து வருகிறார். தீபாவளிக்கு இங்கு வருவார்கள். ஒரு வாரம் போல் தங்கியிருப்பார்கள்” என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.

மறு நாள் அவள் சிறிய கையடக்கமான தாஜ்மஹால் படம் போட்ட மூடியுடைய ஒரு பெட்டியை வீட்டுக்கார அம்மாளிடம் கொடுத்தபடி அவளிடம் தணிந்த குரலில் ஏதோ சொல்லிவிட்டுச் செல்வதை நான் என் அறையில் இருந்தபடி கவனித்தேன்.

ஊரிலிருந்து அந்தப் பெண்ணின் மாமியார் வந்திருந்தார். அமைதியான, நடுத்தர வயதுடையவராக இருந்தார். தானும் தீபாவளிக்காக எல்லோருக்கும் புத்தாடைகள் எடுத்து வந்திருந்தார். அவை சற்று உயர்ந்த ரகம். குழந்தையைக் கொஞ்சி மகிழ்ந்தார். மறுமகளை உட்காரவைத்து விதவிதமாகச் சமைத்துப் போட்டார். தீபாவளிக்கு மணக்க மணக்க நெய் இனிப்புகள் செய்தார். இருவரும் ஓயாது பேசி மகிழ்ந்தனர்.

தீபாவளி கழிந்த மூன்றாம் நாள் அந்த அம்மாள் ஊர் செல்வதாக இருந்தது. ஆனால் அன்று அவருக்கு ஜுரம் வந்துவிட்டது. அரசாங்க வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்றனர். மூன்று வாரம் ஆகியும் காய்ச்சல் விட வில்லை. தனியார் வைத்தியசாலையில் காட்ட வசதி அவர்களுக்கு இல்லை. ஆனால் அப்போதெல்லாம் தர்மாஸ்பத்திரியானாலும் சிரத்தையுடன் கவனித்து வைத்தியம் செய்வார்கள். அந்த அம்மாளுக்கு ஊசியில் செலுத்தும் மருந்து தங்களிடம் இல்லை என்றும் வெளியிலிருந்து வாங்கி வரும்படியும் வைத்தியர் சொன்னதும் இவர்கள் கல்ங்கிப் போய்வ்ட்டனர்.

“போனஸ் பணம், மாமியார் கொண்டுவந்த பணம், என்று எல்லாம் செலவாகி விட்டது. இப்போது யாரைப் போய்க் கேட்பது? இவருக்கும் எனக்கும் கடன் கேட்டே பழக்கமில்லை” என்று எரிச்சல் கலந்தபடி அவள் பொன்னம்மாளிடம் கூறிக் கொண்டிருந்தாள். எப்படியோ மருந்து வாங்கி, ஊசி போட்டு, ஒரு வழியாக உடல் குணமாகி, வீடு மீண்டார் அந்தப் பெண்மணி.

ஊருக்குப் போகும் முன்தினம் மகள், குழந்தையுடன் சினிமா சென்றிருந்த சமயம் அந்த அம்மாள் எங்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் சொன்னார்,  “நான் வருடம் முழுவதும் அவர்கள் வீட்டில் உழைத்து ஓடாகிச் சம்பாதித்த பணம் துணி வாங்கியது போக முழுவதையும் இவளிடம்தான் கொடுக்கிறேன். எப்போதும் தீபாவளி முடிந்த இரண்டொரு நாட்களில் ஊர் திரும்பி விடுவேன். மாட்டுப் பெண்ணும் நல்லபடியாக நடந்து கொள்வாள். இந்தத் தடவை உடம்புக்கு வந்துவிட்டது. இவளுக்கு என்ன எரிச்சல்? சுடுசொல் எப்படி வெளிப்பட்டது தெரியுமா? கஞ்சிக்குப் பால் விடக்கூட மனதாக வில்லை. நான் இனி இங்கு எக்காரணம் பற்றியும் வரப்போவதில்லை. நான் வேலை செய்யும் இடத்தில் தலைவலி என்றால் கூட என்னை வேலை செய்ய விட மாட்டார்கள். நன்றாய் கவனித்துக்கொள்வார்கள்.”

மாமியார் ஊர் சென்ற மறுநாள் மருமகள் பொன்னம்மாளிடமிருந்து உண்டியல் பெட்டியை வாங்கிச் சென்றாள்.