Saturday, October 29, 2011

09-மனக் கருவூலத்திலிருந்து-நரபலி

நரபலி

அந்த மூன்று சகோதரர்களும் வடக்கு நோக்கி நடந்து கொண்டிருந்தனர். பெரியவனுக்கு சுமார் 18 வயதும், சிறியவர்களுக்கு இரண்டு இரண்டு வயது குறைவாகவும் இருக்கலாம். அந்தக் காலத்தில் நடந்து பயணிப்பதுதான் பெரும் பாலும் நிகழும். பணமும் வசதியும் உள்ளவர்கள் மாட்டு வண்டி, குதிரை வண்டி போன்றவற்றிலும், செல்வந்தர் பல்லக்கு சவாரியும் செய்து பயணித்தனர். பல்லக்கு சுமப்பவர்கள் அவர்கள் வீட்டுடன் இருந்தனர். வழியெங்கும் சாலை ஓரங்களில் இரு புறமும் மரங்களும், அடுத்து அடுத்து குளங்களும், அன்ன சத்திரங்களும், மடங்களும் ஆட்சி செய்த மன்னர்களால் பராமரிக்கப்பட்டு பயணிகளுக்கு உதவின. ஆதலால், காசியிலிருந்து இராமேஸ்வரம் வரைகூட மக்கள் கால் நடையாக யாத்திரை செய்வது அப்போதைய வழக்கமாக இருந்தது.

அந்த மூன்று சகோதர்களும் நடந்தே கல்கத்தா வந்து சேர்ந்திருந்தனர். பாஷை தெரியாத ஊரில் தெருக்களில் சுற்றிக்கொண்டு இருந்தனர். அது சமயம் மன்னன் நகர் ஊர்வலம் வந்து கொண்டிருந்தான். அந்த மூன்று பேரையும் பார்த்தவுடன் களையுடன் காணப்படும் இவர்களை காளிக்கு பலிகொடுத்தால் நமக்கு நன்மைகள் கிட்டும் என்று யோசித்து, ஒரு ஆளை அனுப்பி அவர்களைத் தனது அரண்மனைக்கு அழைத்துவந்து, விருந்து, உபசாரங்கள் செய்து அங்கேயே தங்கச் செய்தான். மூவரும் நல்ல சாப்பாடும் போஷாக்கும் கிடைத்ததால் நிகு நிகு வென்று அழகு கூடியிருந்தனர்.

அவர்களுக்கு உணவளித்து அவர்களை கவனித்துக்கொண்டிருந்த மூதாட்டி அந்தச் சிறுவர்கள் காளிக்கு பலியாகப் போவதை எண்ணி மிகவும் மனவருத்தம் கொண்டாள். ஒருநாள் அரசன் நகரில் இல்லாத நேரத்தில் மிகுந்த கவனத்துடன் அவள் சிறுவர்களிடம் வந்தாள். தன்னை யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு சைகைகளும் ஜாடைகளும் செய்து அவர்களுக்கு வரயிருக்கும் ஆபத்தைப் பற்றி அவர்களிடம் விளக்கினாள். பின்னர் மூவரையும் ஒரு அறைக்குக் கூட்டிச் சென்று, தரையோடு தரையாக இருந்த ஒரு கதவைத் திறந்து, அது ஊருக்கு வெளியே கொண்டு விடும் சுரங்க வழி என்பதை புரியவைத்து அவர்களை ஓடித் தப்பிக்கும்படி சொல்லி அனுப்பி வைத்தாள். மூவரும் குழப்பத்துடன் கீழே இறங்கி மறைந்தனர். போகும் வழியில் பல அறைகள் இருந்தன. அவற்றில் பொன்னும், மணிகளும் ஏராளமாக கொட்டிக் கிடந்தன. அம் மூவரும் தங்கள் மேல் துண்டில் முடிந்த அளவு அவற்றை அள்ளி முடிந்து கொண்டு, நகரிலிருந்து வெளியேறி தப்பித்து, தெற்கு நோக்கிப் பயணப்பட்டனர்.

ஆனால், அவர்கள் தங்கள் ஊரை அடைந்தபோது அவர்களில் கடைசி தம்பி அவர்களுடன் இருக்கவில்லை. மற்ற இருவரும் தங்களுக்கு நேரவிருந்த ஆபத்தைப் பற்றிச்சொல்லி, அதிலிருந்து மீண்டவிதம் பற்றியும், கூறினார்கள். வரும் வழியில் தம்பி ஒரு கிணற்றில் இறங்கி நீர் அருந்தியபோது கால் வழுக்கி விழுந்து இறந்து விட்டதாகவும் சொன்னார்கள். பெற்றோர், இருவராவது மீண்டனரே என்று சமாதானம் அடைந்து விட்டனர். சிறுவர்கள் கொண்டு வந்திருந்த செல்வத்தைக் கொண்டு நிலம் நீச்சு என்று வாங்கி ஊரையே வளைத்துக் கொண்டனர்.
ஆனால், ஊர் மக்கள் அந்தச் சிறுவர்கள் சொல்வது உண்மையல்ல என்றும், தம்பியை பலிகொடுக்கவென்று விற்றுவிட்டு பணத்துடன் திரும்பி இருப்பார்கள் என்றும் கிசுகிசுப்பாக ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.

No comments: