Tuesday, October 9, 2007

02-மனக் கருவூலத்திலிருந்து

பக்தி
-----
மனித இனம் எல்லாம் ஒரு எல்லைக்கு உட்பட்ட அறிவோடும் ஆற்றலோடும் இருக்கிறது. அதைக் கொண்டுதான் தன் வாழ்க்கையைப் பகுத்து வாழவேண்டி யிருக்கிறது.சுத்தமான கண்ணாடியில் தெரிவதும் கட்டாந்தரையில் தெரிவதும் ஒரு பொருளின் பிரதிபலிப்பான நிழல்தான் என்றாலும் தரையில் விழும் நிழலில் நம் ஜாடை தெளிவற்று மொத்தையாக இருக்கிறது. ஆனால் உயர்ந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் (ஏறக்குறைய) தத்ரூபமாகத் தெரிகிறது. அதுகூட வலம் இடமாக மாற்றித்தான் தெரியும்.
மனித இனம் எல்லாமே ஒரே மாதிரி விகாசமாக இருப்பதில்லை. தெளிவு, சுமாரான தெளிவு, அறியாமை மிகுந்து குறைந்த அறிவு என்று சராசரியாக மூன்றுவிதம் காணப்படுகிறது. இதைத்தான் "சத்வ, ரஜோ, தமோ" குணங்கள் என்று வேதாந்திகள் சொல்லுகிறார்கள். அவரவர் குணங்களுக்குத் தக்கபடி உலகையும் மக்களையும் வாழ்க்கையையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப வாழ்கிறார்கள்.
பல சமயங்களில் மனிதன் தனக்கு மீறிய ஒரு சக்தி தன்னையும் உலகையும் ட்டி வைப்பதை உணருகிறான். அப்போது அவன் தன்னையும் அறியாமல் அதற்குத் தலை வணங்குகிறான், பயப்படுகிறான். தன் கைமீறிப் போகும் பல சம்பவங்களின்போது அந்த சக்தியிடம் யாசிக்கிறான். இதைத்தான் நாம் 'பக்தி' என்று சொல்லுகிறோம். இந்த 'பக்தி'யை நம் முன்னோர்கள் இரண்டு விதமாகப் பிரித்திருக்கிறார்கள்.
அ) காம்ய பக்தி
ஆ) நிஷ்காம்ய பக்தி.
'காம்ய பக்தி'யில் நாம் நமது நலன்களுக்காக பக்தி செய்கிறோம் (நோய் தீர வேண்டும், செல்வச் செழிப்போடு இருக்கவேண்டும், பரிட்சையில் தேர்வடைய வேண்டும் என்பதுபோல). 'நிஷ்காம்ய பக்தி' செய்பவர்கள் 'பக்தி'க்காகவே பக்தி செய்வார்கள். அவர்களுக்கு அச்செய்கையில் ஒரு இன்பம் கிடைக்கும். ஒரு குடிகாரன் எப்படிக் குடும்பம், குழந்தை என்பன போன்றவற்றைக்கூட விரும்பாமல் குடியில் ஆழ்கிறானோ அதுபோல உண்மையான் 'நிஷ்காம்ய' பக்தர்கள் பக்தியில் ஈடுபட்டு உலகையே துறக்கின்றனர்.
பிரார்த்தனையும் வேண்டுதலும்
---------------------------------
நம் பெரியோர்கள் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள், 'நீ கடவுளை பிரார்த்திப் பாயானால் நீ விரும்பும் யாவும் கைகூடும்' என்று. இது ஓரளவு உண்மைதான் என்றாலும் முழுவதுமாக ஏற்கமுடியாது. யோசித்துப் பார்த்தால் அப்படி எல்லோருக்கும் எல்லாக் காலங்களிலும் நடந்துவிடுவதில்லை. கடவுள் அப்படி நடத்திக் கொடுப்பதாய் இருந்தால் கவுளின் ஸ்தானம் வேலைக் காரனின் நிலைக்கு வந்துவிடும்.
எதற்கும் ஒரு தகுதியும் தேவைப்படுகிறது. ஆக, எவருடைய பிரார்த்தனைக் குத்தான் செவி சாய்க்கலாம் என்பது அவரின் (கடவுளின்) விருப்பத்தைப் பொருத்த விஷயம். லாட்டரி சீட்டு வாங்கினால் பரிசு விழும் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும் அது எல்லோருக்குமே விழுந்து விடாது. அப்படி நடக்கவும் முடியாது. ஆனால் பிரார்த்திப்பது அன்றி மனிதன் வேறு ஒன்றும் செய்யவும் முடியாது. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பிரார்த்திப்பது மட்டும் அல்லாமல் அறிவுபூர்வமான சுய முயற்சிகளும் இருக்க வேண்டும். செயல் என்றால் அதற்குக் கண்டிப்பாக விளைவும் உண்டு.
வேண்டுதல் செய்து கொள்பவர்கள், "பகவானே, நீ எனக்கு இதைச் செய்து கொடு, நான் உனக்கு இன்ன காணிக்கை கொடுக்கிறேன்" என்று வேண்டிக் கொள்வார்கள். உண்மையில் சொல்லப் போனால் எல்லாமே கடவுளுடைய பொருள் ஆனதால் அவருக்குக் கொடுக்க மனிதனுக்கென்று தனியாக ஒன்றும் இல்லை. னால் வேண்டிக்கொண்டபடி செய்யா விட்டால் அவன் சோதனைக்கு உள்ளாக்குகிறான். வேண்டுதலை நிறைவேற்றியே தீர வேண்டும்.
நான் இனி பிரார்த்தனையால் பயன் அடைந்த கதை ஒன்றையும் வேண்டுதலால் சோதிக்கப் பட்ட கதை ஒன்றையும் சொல்கிறேன். இவை இரண்டுமே இந்தக் கலிகாலத்தில் உண்மையாக நடந்த சம்பவங்கள்தாம்.

No comments: