Tuesday, October 16, 2007

03-மனக் கருவூலத்திலிருந்து

சாக்ஷி
ஒரு ஊரில் ஒரு கோமுட்டி செட்டி இருந்தான். அவன் மிகவும் நேர்மையான வன். திருப்பதி வெங்கடாசலபதியிடம் பக்தி கொண்டவன். அவனுக்கு ஒரு முறை கொஞ்சம் பணத் தேவை உண்டாயிற்று. அந்த ஊரில் வட்டிக்குப் பணம் கொடுப்பவனிடம் கடன் வாங்கினான். கடன் வாங்கும் போது அங்கு ஒருவன் சாக்ஷியாக நின்றிருந்தான். சில மாதங்களில் அவன் வாங்கிய கடனைத் திருப்பி அடைத்துவிட்டான். ஆனால் அப்போதும் சாக்ஷி வைத்துக் கொள்ளவேண்டும் என்பது அவனுக்குத் தோன்றவில்லை. கடன் கொடுத்தவன் அதைப் பயன்படுத்திக் கொண்டான். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து விட்டான்.
செட்டி அதிர்ந்து போனான். நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. கடன் கொடுத்ததை தக்க சாக்ஷியோடு உறுதிப்படுத்தினான் வட்டிக் கடைக்காரன். செட்டியை நீதிபதி விசாரித்தபோது அவன் அழுதுகொண்டே கடனைத் திருப்பிச் செலுத்தி விட்டதாகச் சொன்னான். அது உண்மையாக இருக்கக்கூடும் என்றே நீதிபதிக்குத் தோன்றியது. அவர் செட்டியிடம் கேட்டார், "நீர் கடனைத் திருப்பிக் கொடுத்தபோது அங்கு யாராவது சாக்ஷியாக இருந்தார்களா?" செட்டி, "சாக்ஷியா? வெங்கடாசலபதிதான் சாக்ஷி" என்று கண்ணீர் விட்டபடி கூறினான்
கோர்ட்டார் அது ஒரு மனிதன் என்று எண்ணிவிட்டார். உடனே 'வெங்கடா சலபதி!' என்று மூன்று முறை உரத்த குரலில் அழைக்கப் பட்டது. ஒரு உயரமான மனிதன் நெற்றியில் பெரிய நாமத்தோடும், பஞ்சகச்ச வேட்டி யோடும், மேலே மஞ்சள் அங்கவஸ்திரதோடும் சாக்ஷிக் கூண்டில் வந்து நின்றான். அவனைப் பார்த்த செட்டிக்கு ஆச்சர்யமாக இருந்தது. அந்த மனிதனை செட்டி இது வரை பார்த்ததே இல்லை. செட்டி கடனைத் திருப்பிக் கொடுத்தபோது தான் சாக்ஷியாக அங்கு இருந்ததாக அவன் சொல்லிவிட்டு கூண்டைவிட்டு அகன்று போனான்.
தீர்ப்பு செட்டி பக்கம் ஆனது. நீதி மன்றத்தை விட்டு வெளியில் வந்த செட்டி எங்கு தேடியும் தனக்கு சாக்ஷி சொன்ன மனிதனை கண்டுபிடிக்க முடியவில்லை.
வேண்டுதல்
----------------
தர்மசீலை என்று ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு அன்பான நல்ல கணவனும், தரவான மாமன் மாமியும், வளமான வாழ்வும் அமைந்திருந்தன. அவர்கள் திருப்பதியில் வசித்து வந்தனர். ஆனால் வருடங்கள் பல ஆன போதும் அவளுக்குப் பிள்ளைப் பாக்கியம் கிடைக்க வில்லை. எத்தனையோ வேண்டுதல்கள், மருந்து மாத்திரைகள் என்று செலவு செய்தும் பலனில்லை.
நாட்கள் செல்லச் செல்ல கணவனின் அன்பும் மற்றவரின் ஆதரவும் குறையலாயின. அவளை மலடி என குறை சொல்லத் தொடங்கி விட்டனர். இந்த 'மலடி' என்ற சொல் அவளை மிகவும் பாதித்துவிட்டது. அவள் மிகவும் உருக்கமாக "வெங்கடாசலபதியே என் மலட்டுக்குறை தீரும்படி எனக்கு ஒரு குழந்தையைக் கொடுத்து அருள். எனக்கு குழந்தையைக் கொஞ்சும் பாக்கியம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அந்தக் குழந்தையை உன் தேர் வீதியில் பவனி வரும்போது தேர்சக்கரத்தின் முன்னால் பலி கொடுத்துவிடுகிறேன்" என்று வேண்டிக் கொண்டாள்.
விரைவில் அவள் கர்ப்பம் தரித்தாள். வீட்டில் அவளுக்கு ஏக உபசரிப்பு, மரியாதை. அவளும் அதீதமான மகிழ்ச்சியில் இருந்தாள். தன் பிரார்த்தனை பற்றி அவள் பெரிதாக நினைக்க வில்லை. அனேகமாக மறந்தேபோனாள். உரிய காலத்தில் அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு ஆறு அல்லது ஏழு மாதங்கள் ஆன சமயம் தேர் திருவிழா வந்துவிட்டது. தேர் வீதியில் அவள் வீட்டின் முன்பு வந்து நின்றுவிட்டது. எத்தனையோ முயன்றும் அதை மேலே இழுக்க முடியவில்லை. யானை பின்புறமாக தேரை மோதியும் அது அசைய வில்லை. நாளெல்லாம் அங்கேயே நின்றது. இது ஊர் மக்களுக்கு அதிசயமாகவும் கலவரமாகவும் இருந்தது. ஒருவருகொருவர் அதுபற்றி பேசிக் கொண்டனர்.
தருமசீலை ஒரு முடிவுக்கு வந்தாள். தன் குழந்தையைத் தோளில் சாய்த்த படி வீதியில் இறங்கினாள். சட்டென்று தேர் சக்கரத்தின் முன்பு குழந்தையைக் கிடத்தித் தானும் படுத்துவிட்டாள். அதே சமயம் ஒரு பயங்கரமான புயல் வீசத் தொடங்கியது. தேரின் பின்புறம் நின்றிருந்த யானை விரைந்துவந்து தேரை பக்க வாட்டில் ஒரு உந்து உந்தியது. தேர் தடம் மாறி நகர்ந்து கொஞ்சம் விலகி ஓடத்தொடங்கியது. புயலும் நின்றுவிட்டது. குழந்தையும் தாயும் எவ்வித சேதாரமுமின்றிப் பிழைத்துக் கொண்டனர்.

2 comments:

Ambasoft said...

Mr.Nagarajan.

Vanakkam. can you please let me know, from where you come to know about the தர்மசீலை story?

அரவக்கோன் நாகராஜன் said...

vanakkam,
I am not 'poorani' she is now 100 years old. lives with his son.